இவர்கள் ஏன் நீச்சலடித்து பள்ளிக்குப் போகிறார்கள்?.. குஜராத் அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி
டெல்லி: குஜராத் மாநிலம் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் ஆற்றை நீந்திக் கடந்து போய் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருவது தொடர்பாக குஜராத் அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாணவர்கள் ஏன் இப்படி நீச்சலடித்துப் போய் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் குஜராத் அரசு விளக்கம் அளிக்கவும் அது உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மீடியாக்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
இதுகுறித்து அது அனுப்பியுள்ள நோட்டீஸில், இந்த சம்பவமானது, குழந்தைகளின் கல்வி கற்கும் உரிமையையும், பாதுகாப்பையும் மீறுவதாக உள்ளது. இதுகுறித்து குஜராத் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மத்திய குஜராத்தில் உள்ள சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் சுற்று வட்டாரக் குழந்தைகள் தினசரி ஆற்றைக் கடந்து போய் படித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளிகளே இல்லாததால் இந்த அவல நிலை.
மேலும் பிள்ளைகள் நீச்சலடித்துப் போவதை அவர்களின் பெற்றோர்கள் சுற்று வைத்து தினசரி கண்காணிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டுமாறு பல காலமாக கோரியும் குஜராத் அரசு அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதையடுத்து தற்போது இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டுள்ளது.