குஜராத் ஊழலில் தான் வளர்ச்சியடைந்துள்ளது... வளர்ச்சிப் பணிகளில் அல்ல : தேவகவுடா
ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, பெங்களூர் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
3-வது அணி குறித்து பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இது சரியல்ல. அவர் தேவையற்றதை பேசக்கூடாது. நான் 13 கட்சிகளின் ஆதரவுடன் நாட்டின் பிரதமராக 10 மாதங்கள் பணியாற்றி உள்ளேன். அப்போது எந்த நேரத்திலும் யாரை பற்றியும் அவதூறாக பேசியது இல்லை.
குஜராத் மாநிலத்துக்கு மட்டும் தான் மோடி முதல்வர். ஆனால், இப்போதே பிரதமர் ஆகிவிட்டது போன்று அவர் பேசி வருகிறார். மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு அதிகளவில் கூட்டம் கூடுகிறது. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஆகும்.
குஜராத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு உள்ளதாக கூறி வருகிறார்கள். ஆனால், அங்கும் ஊழல் அதிகளவில் உள்ளது. வளர்ச்சி பணிகளில் பின்னடைவு உள்ளது. மோடியை பா.ஜ.க தான் பிரதமர் வேட்பாளராக அறிவித்து உள்ளது. நாடு அல்ல. இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். மோடிக்கு ஆட்சி நிர்வாக அனுபவம், அரசியல் ஞானம் இல்லை.
பீகார் முதல்வர் நிதீஷ்குமாரை மோடி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இது மோடியின் தகுதிக்கு சரியானது அல்ல. பா.ஜ.க தலைவர்கள் வாஜ்பாய், அத்வானியை காட்டிலும் பெரியவர்கள் அந்த கட்சியில் யாரும் இல்லை. அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் மற்றவர்கள் குறித்து அவதூறாக பேசக்கூடாது. 3-வது அணியின் பலம் குறித்து தேர்தலுக்கு பிறகு தெரியும். அதை மக்கள் முடிவு செய்வார்கள்' என இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.