பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு: குஜராத் ஹைகோர்ட் நீதிபதி உத்வானி விசாரணையில் இருந்து திடீர் விலகல்!
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் வழக்கில் இருந்து விலகுவதாக குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி உத்வானி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடி வாக்களித்துவிட்டு செல்பி எடுத்தார். இதனால் அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிசாந்த் வர்மா அகமதாபாத் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வர்மா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 28-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் திரிவேதி கால அவகாசம் கேட்டதால் நீதிபதி உத்வானி அக்டோபர் 6-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அட்வகேட் ஜெனரல் வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வராததால், அரசு வழக்கறிஞர் மிதேஷ் அமின் மேலும் கால அவகாசம் கேட்டார்.
இதில் புதிய திருப்பமாக இந்த வழக்கை விசாரிக்க நான் விரும்பவில்லை என்றும் வழக்கில் இருந்து தான் விலகிக்கொள்வதாகவும் நீதிபதி உத்வானி அறிவித்தார். ]