பிஎம் எதுக்கு? எங்க அம்மா பேர சொன்னாலே ஓட்டு விழும்! குஜராத் தேர்தலை உலுக்கிய 'லேடி டான்'.. யார் இது
காந்திநகர்: குஜராத் தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மூன்று கட்சிகளும் பரபரப்பாக பிரசாரம் மேற்கொண்டிருக்கையில், 'குடியானா' தொகுதியின் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் மட்டும் தன்னுடைய தாயின் பெயர் சொன்னாலே ஓட்டு விழும் என்று 'கூலாக' வலம் வந்துகொண்டிருக்கிறார்.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ம் தேதியும் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் பாஜக கோலோச்சிவிட வேண்டும் என்று முயன்று வரும் நிலையில் குடியானா தொகுதி வேட்பாளரான 'காந்தல் ஜடேஜா' எந்த கட்சிக்கும் பிடி கொடுக்காமல் கெத்து காட்டி வருகிறார்.
புண்படுத்திட்டாங்க..பாஜக சூர்யா சிவா மீது போலீசில் புகார்! அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குடியானா தொகுதி
பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய புள்ளிகள் எல்லாம் குஜராத்தில் களமிறங்கியுள்ள நிலையில், குடியானா தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிடும் 'காந்தல் ஜடேஜா' எனும் வேட்பாளர் மட்டும் தனது தாயின் பெயரை சொல்லி வாக்கு சேகரித்த வருகிறார். அப்படியெனில் இவரின் தாய் சுதந்திர போராட்ட தியாகியா? என்று கேட்டால் அதுதான் கிடையாது. இவரின் தாய் குஜராத்தின் 'காட்மதர்'. அதாவது இவர் குஜராத்தின் பெண் கேங்ஸ்டர். இவரின் பெயர் 'சந்தோக்பென் சர்மன்பாய் ஜடேஜா'. இவரை டான் என்றும் சிலர் அழைப்பதுண்டு.
டான் என்ட்ரி
இவர் 1986 வரை சாதாரண குடும்ப பெண்தான். ஆனால் இதே ஆண்டில் இவரது கணவரை சிலர் கொலை செய்துவிட்டனர். அதன் பின்னர்தான் இவர் கேங்க்ஸ்டராக உருவெடுக்க தொடங்கினார். தனது கணவரின் கொலைக்கு பழிவாங்க துடித்த சந்தோக்பென் சர்மன்பாய் ஜடேஜா, பாண்டுரங் சாஸ்திரியின் உடன் கூட்டணி அமைத்து அதை சாத்தியப்படுத்தினார். பாண்டுரங் சாஸ்திரி என்பவர் ஸ்வாத்யா இயக்கத்தின் தலைவராவார். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.
GodMother
குஜராத்தில் பல பகுதிகளில் சந்தோக்பென் சர்மன்பாய் ஜடேஜாவின் அதிகாரம் மெல்ல பரவத் தொடங்கியது. இது 80-90 காலகட்டங்களில் உச்சத்தை எட்டியது. விளைவு சந்தோக்பென் சர்மன்பாய் ஜடேஜா மீது 14 கொலை வழக்குகள், 500க்கும் அதிகமாக குற்ற வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் அவர் செய்த சம்பவங்கள்தான் 1990-1995 வரை அவரை குடியானா தொகுதி எம்எல்ஏவாகவும் ஆக்கியது. கடைசியாக 2007ம் ஆண்டு இரண்டு பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அம்மாநில காவல்துறையால் சந்தோக்பென் சர்மன்பாய் ஜடேஜா கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது செயல்பாடுகள் குறையத் தொடங்கியது. இறுதியாக 2011ம் ஆண்டு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். குஜராத்தின் இன்றைய 2K கிட்ஸ்களுக்கு இவரை பற்றி அதிகம் தெரியாது. ஆனால் 80s மற்றும் 90s கிட்ஸ்களுக்கு இப்போதுவரை இவர்தான் GodMother.
சமாஜ்வாதி
இப்பேர்ப்பட்ட டானின் மகன்தான் காந்தல் ஜடேஜா. கடந்த 2 முறையும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் களம் இறங்கி வெற்றி பெற்ற இவருக்கு இந்த முறை அக்கட்சியிலிருந்து சீட் ஒதுக்கப்படவில்லை. ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். இந்த ஆதரவு நிலைப்பாடு தற்போது வரை தொடர்கிறது. எனவே கடுப்பான கட்சி தலைமை இந்த முறை இவருக்கு குடியானா தொகுதியில் சீட் கொடுக்கவில்லை. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத காந்தல் ஜடேஜா, சமாஜ்வாதி கட்சியின் சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
பெயர் மட்டும்
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "நான்தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸை குஜராத்தில் அறிமுகப்படுத்தினேன். ஆனால் இனி அக்கட்சி இங்கு இருக்காது. இனி நான் சமாஜ்வாதி கட்சியை வளர்க்க இருக்கிறேன். இது எனது தாயின் சொந்த கிராமம். இங்கு எனக்கு கட்சியை பார்த்து ஓட்டு போட மாட்டார்கள். மாறாக என் தாயை பார்த்துதான் வாக்களிப்பார்கள். எனது தாயின் பெயர் போதும் எனக்கு" என்று கூறியுள்ளார். பெரிய பெரிய கட்சிகளெல்லாம் தொகுதியை கைப்பற்ற பல தலைவர்களை களம் இறக்கியுள்ள நிலையில், குடியான தொகுதி வேட்பாளர் வாக்குகளை பெற தனது தாயின் பெயர் மட்டும் போதுமானது என்று கூறியிருப்பது அம்மாநில தேர்தல் மீதான கவனத்தை அதிகரித்திருக்கிறது.