கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுவதில் குஜராத் டாப்… அதிர்ச்சி புள்ளிவிபரம்
டெல்லி: கள்ளநோட்டு புழக்கத்தில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
நாட்டில் பெருகி வரும் கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த சில முயற்சிகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சேர்ந்து எடுத்து வருகின்றன. இதன் முதல் கட்டமாக அதிகளவில் கள்ளநோட்டு புழங்கும் மாநிலங்கள் பற்றி தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதற்காக தேசிய குற்ற ஆவணக்காப்பகத்திடம் இருந்து பெற்ற புள்ளி விவரத்தில் 5 மாநிலங்களில் கள்ளநோட்டுகள் சுலபமாக அதிகளவில் புழங்குவது தெரியவந்துள்ளது. இவற்றில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
குஜராத் முதலிடம்
இந்தியாவில் கள்ளநோட்டை புழக்கத்தில் விடும் சதிக்கும் பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் இருக்கிறது. அதிக கண்காணிப்பு இல்லாத குஜராத் எல்லை வழியாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களை ஐஎஸ்ஐஎஸ் புழக்கத்தில் விடுவதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது.
சட்டீஸ்கர் நம்பர் 2
கடந்த ஆண்டு சுமார் 3 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 604 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் குஜராத்தில் இருந்து 87 லட்சத்து 47 ஆயிரத்து 820 ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. கள்ள நோட்டு புழக்கத்தில் சட்டீஸ்கர் இரண்டாம் இடத்தில் உள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து 73 லட்சத்து 86 ஆயிரத்து 900 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன.
கள்ள நோட்டுக்கள்
ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன. ரூ.1000, ரூ.500 கள்ள நோட்டுக்கள்தான் அதிக அளவில் புழக்கத்தில் விடப்படுகின்றன.
ரிசர்வ் வங்கி
இந்த நிலையில் கள்ளநோட்டுகளை தடுக்கும் விதத்தில் ரூபாய் நோட்டுகளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை புகுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏ.டி.எம்-களில் கள்ளநோட்டுகள் வந்தால் குறிப்பிட்ட வங்கிக்கு எதிராக வாடிக்கையாளர்கள் காவல்த்துறையில் புகார் அளிக்க சட்டவிதி இருப்பதாக வங்கித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணையில் வங்கியின் அலட்சியமே கள்ளநோட்டுக்கு காரணம் என்று தெரியவந்தால் சம்மந்தப்பட்ட வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
1000 ரூபாய் நோட்டு
பிடிபட்ட கள்ள நோட்டுக்களில் 1000 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் ஒரு கோடியே 98 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அளவிற்கு பிடிப்பட்டுள்ளன. அதேபோல ரூ.500, ரூ.100, ரூ.50 மதிப்புள்ள கள்ள நோட்டுக்களும் அதிக அளவில் பிடிபட்டுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.