ஞானவாபி மசூதி வழக்கு: சிவலிங்கத்தின் காலம் குறித்து ஆய்வு செய்ய கோரிய இந்து அமைப்பு மனு தள்ளுபடி!
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் போன்ற உருவத்தின் கால வயதை கார்பன் டேட்டிங் மூலம் ஆய்வு செய்ய கோரிய இந்து அமைப்பின் மனுவை வாரணாசி நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது.
வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரி முதன் முதலாக 1991-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 2019-ம் ஆண்டு ஞானவாபி மசூதியில் ஆய்வு கோரி வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் 2021-ம் ஆண்டு ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதித்தது. மேலும் டெல்லியை சேர்ந்த 5 பெண்கள், ஞானவாபி மசூதி வளாகத்தில் மா சிருங்கார் கௌரி உள்ளிட்ட தெய்வங்களை தரிசனம் செய்து வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த மே மாதம், ஞானவாபி மசூதியை வீடியோ பதிவு செய்ய தடை கோரி மஸ்ஜித் இந்த ஜாமியா என்ற முஸ்லிம் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகியது. சர்ச்சைக்குரிய சிவலிங்கம் பகுதியை பாதுகாக்கவும் தொழுகை நடத்த அனுமதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இவ்வழக்கை வாரணாசி நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரிய 5 பெண்கள் மனுவை விசாரணைக்கு ஏற்றது வாரணாசி நீதிமன்றம். இவ்வழக்கில் ஞானவாபி மசூதியின் உண்மையான வயது தொடர்பாக கார்ப்ன் டேட்டிங் ஆய்வு மேற்கொள்ள கோரியும் இந்துக்கள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய விசாரணையின் போது இம்மனுவை வாரணாசி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.