ட்விட்டருடன் 'யுத்தம்" நடத்தும் தீவிரவாதி ஹபீஸ் சயீத்!!
டெல்லி: மும்பை தாக்குதலின் மூளையான பாகிஸ்தானின் ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் ட்விட்டர் கணக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டது. ஆனால் ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவாவோ ட்விட்டர் நிர்வாகத்துடன் புதிய பெயரில் கணக்குகளைத் தொடங்கி யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது.
ஹபீஸ் சயீத் அண்மையில் லாகூரில் இருநாள் மாநாட்டை நடத்தி இருந்தார். அம்மாநாட்டில் ஜம்மு காஷ்மீரை விடுதலை செய்ய இந்தியா மீது போர் தொடுப்போம் என்றெல்லாம் பயங்கரவாத கருத்துகளை தெரிவித்திருந்தார்.

அதனை தமது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து டிவி டுடேவின் மேனேஜிங் எடிட்டரான ராகுல் கன்வால், இத்தகைய பயங்கரவாதிகளின் ட்விட்டர் கணக்குகளை ஏன் சர்வதேச அளவில் ட்விட்டர் நிர்வாகம் சஸ்பென்ட் செய்யக் கூடாது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேபோல் மத்திய அரசும் ஏன் இந்த கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த குரலைத் தொடர்ந்து வட இந்திய ஊடக பிரபலங்களும் இதேபோல் கருத்தைப் பதிவிட்டு வந்தன.
இந்த நிலையில் ஹபீஸ் சயீத்தின் ட்விட்டர் கணக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே hafizsaeedjud1 என்ற பெயரிலும் jud_official1 என்ற பெயரிலும் கணக்குகளைத் தொடங்கி இந்தியாவுக்கு எதிராகவும் ட்விட்டர் நிர்வாகத்துக்கும் எதிராக விஷத்தை கக்கினர்.
இதனால் jud_official1 என்ற கணக்கை ட்விட்டர் மீண்டும் சஸ்பென்ட் செய்தது. தற்போது hafizsaeedjud1 என்ற கணக்கில் ட்விட்டர் நிர்வாகத்தின் இரட்டை நிலைப்பாட்டை விரைவில் அம்பலப்படுத்துவோம் என்றும் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்தும் பிரசாரம் செய்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த hafizsaeedjud1 - கணக்கையும் எப்போது வேண்டுமானாலும் ட்விட்டர் நிர்வாகம் சஸ்பென்ட் செய்யலாம் என்றே தெரிகிறது












Click it and Unblock the Notifications