சூரத்தை தொடர்ந்து அகமதாபாத்திலும் ஹர்திக் படேல் மீது பாய்ந்தது தேசதுரோக வழக்கு!
அகமதாபாத்: சூரத்தைத் தொடர்ந்து அகமதபாத்திலும் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்துள்ளது. 2வது தேசதுரோக வழக்கில் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
முற்படுத்தப்பட்ட படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குக; இல்லையேல் இடஒதுக்கீட்டு முறையை ஒழித்து கட்டுங்கள் என்ற முழக்கத்துடன் போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் ஹர்திக் படேல். இவரது போராட்டத்தால் குஜராத் ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடி உருவானது.
இதனைத் தொடர்ந்து ஹர்திக் படேல் மீது பல்வேறு வழக்குகளை குஜராத் அரசு தொடர்ந்தது. இந்நிலையில் ராஜ்கோட்டில் இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போராட்டத்தை தடுக்க முயன்றதாக ஹர்திக் படேல் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது அவர் தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஆனால் 2 நாட்களிலேயே ஹர்திக் படேல் விடுதலையாகிவிட்டார். இருப்பினும் சூரத் போலீசார், போலீசாரை கொலை செய்ய தூண்டும் வகையில் பேசியதற்காக தேச துரோக வழக்கை ஹர்திக் மீது போட்டனர். இந்த வழக்கில் அக்டோபர் 23-ந் தேத் இவரை 14 நாள் சிறை காவலுக்கு ஹர்திக் அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் அகமதாபாத் போலீசார் நேற்று ஹர்திக்கை மற்றொரு தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்வதாக தெரிவித்தனர். இதனால் ஹர்திக் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதனிடையே ஹர்திக் படேல் மீதான தேசதுரோக வழக்குகளை எதிர்த்து அவரது தந்தை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.