25 ஆண்டுகளில் 51 டிரான்ஸ்பர்.. அசராத ஹரியானா ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா
ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா மீண்டும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகர் : நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அறியப்பட்ட அசோக் கெம்கா ஹரியானா மாநில அரசால் தற்போது 51வது முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
1991ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ச் அதிகாரி அசோக் கெம்கா. ஹரியானா அரசின் சமூக நீதி மற்றும் முன்னேற்றத்திற்கான செயலாளராக இருந்த அசோக் கெம்கா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இது இவரது 25 ஆண்டு பணி அனுபவத்தில் 51வது பணியிட மாற்றம் ஆகும். இதற்கு முன்னதாக பல இடங்களில் நேர்மையாக செயல்பட்டிருந்ததற்கு மாற்றப்பட்டு இருந்தாலும், இவர் வெளிச்சத்திற்கு வந்தது ராபர்ட் வதோரா - டி.எல்.ப் நிறுவனங்களுக்கான நிலப்பரிமாற்றத்தை ரத்து செய்தபோதும் பணியிட மாற்றதலுக்குள்ளாகி கடும் நெருக்கடிக்கு ஆளானார். ராபர்ட் வதோரா காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன்.
So much work planned. News of another transfer. Crash landing again. Vested interests win. Déjà vu. But this is temporary.
— Ashok Khemka (@AshokKhemka_IAS) November 12, 2017
Will continue with renewed vigour and energy.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அசோக் கெம்கா, 'இன்னும் பல பணிகளுக்குத் திட்டமிட்டு இருந்தேன். தற்போது தான் பணியிட மாற்றம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. மீண்டும் இது ஒரு வலி மிகுந்த தருணம். இருந்தாலும் இது தற்காலிகமானதே. மீண்டும் அதே உத்வேகத்தோடு பணி புரிவேன்' என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா அமைச்சர் கிருஷ்ணா பேடி, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக முறைக்கேடாக அரசு வாகனத்தைப் பயன்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பிய கெம்கா, அதை திருப்பி ஒப்படைக்கும்படி கடிதம் எழுதினார். மேலும், கடந்த மாதம் முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரின் தனிப்பட்ட உதவியாளருக்கு அரசு நிதியில் இருந்து தீபாவளி போனஸ் வழங்கப்பட்டதை கண்டித்து இருந்தார். இதனால், பணியிடமாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.