சிக்காத "டுபாக்கூர்" சாமியார் ராம்பால்! 2வது நாளாக இன்றும் தேடுதல் வேட்டை! உதவியாளர் கைது!!
பர்வாலா: சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய 2வது நாளாக ஹரியானா போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்று பர்வாலா சத்லோக் ஆசிரமத்தில் ராம்பாலின் மூத்த உதவியாளர் புருஷோத்தம் தாஸை கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளை மிரட்டும் வகையில் ராம்பாலின் சீடர்கள் நீதிமன்றத்துக்குள் அணிவகுப்பு நடத்தினர். இதைத் தொடர்ந்து ராம்பால் மீது பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் 2 முறை பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஹரியானா போலீசாரால் ராம்பாலை கைது செய்ய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து 3வது முறையாக திங்களன்று மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் ராம்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராம்பாலை கைது செய்வதற்காக ஹிசாரில் உள்ள அவரது 'சத்லோக்' ஆசிரமத்தின் முன்பு போலீசார், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். ஆனால் போலீசாரை ஆசிரமத்துக்குள் நுழையவிடாதபடி, ராம்பாலின் சீடர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டனர்.
கோட்டை போன்ற ஆசிரமத்தின் மதில் சுவர் மீது ஏறி நின்று கொண்டு போலீசார் மீது ராம்பாலின் ஆயுதம் தாங்கிய சீடர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெடிகுண்டுகளை வீசியும் ஆசிட் பைகளை எறிந்தும் வெறியாட்டம் போட்டனர். இதில் நூற்றுக்கணக்கான போலீசார் படுகாயமடைந்தனர்.
இதனால் ஆயுதம் தாங்கிய கும்பலை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த மோதலில் 70க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர். பின்னர் ராம்பால் சீடர்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடியே ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் ஆசிரமத்தின் நுழைவாயில் உட்பட சில பகுதிகளை தகர்த்து போலீசார் உள்ளே நுழைந்தனர்.
அப்போது ஜேசிபி எந்திரத்துக்கு ராம்பாலின் சீடர்கள் தீ வைத்தனர். அங்கு துப்பாக்கி முனையில் அடைக்கப்பட்டிருந்த பெண்கள், குழந்தைகளை போலீசார் மீட்டு ஆசிரமம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர். 12 ஏக்கர் பரப்பளவிலான அந்த ஆசிரமத்தில் நள்ளிரவு வரை தேடுதல் நீடித்தது.
ஆனாலும் சாமியார் ராம்பால் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வெளியே வந்த போலீசார் ஆசிரமத்துக்குள் அடைக்கப்பட்டிருந்தோரை பேருந்துகளில் ஏற்றி அவர்கள் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று 2வது நாளாக சாமியார் ராம்பாலை தேடும் நடவடிக்கையை ஹரியானா போலீசார் மேற்கொள்கின்றனர். ஆசிரம பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராம்பாலின் ஆயுதம் தாங்கிய சீடர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்,
ராம்பால் உதவியாளர் கைது
இந்த நிலையில் இன்று பர்வாலா சத்லோக் ஆசிரமத்தில் ராம்பாலின் மூத்த உதவியாளர் புருஷோத்தம் தாஸை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் ராம்பால் எங்கே பதுங்கியிருக்கிறார் என துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications