அஸ்ஸாம் கோர்ட் பிடிவாரண்ட் விவகாரம்- ஜூன் 22-வரை சு.சுவாமி கைது இல்லை!!
டெல்லி: அஸ்ஸாம் நீதிமன்ற பிறப்பித்த ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்டை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது விசாரணையை ஜூன் 22-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தின் காசிரங்கா பல்கலைக் கழகத்தில் மார்ச் 15-ந் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் மக்களிடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி பேசினார் என அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மார்ச் 19-ந் தேதியன்று சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக கரீம்கஞ்ச் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனிடையே மே 21-ந் தேதியன்று 'வெறுப்பை தூண்டும் வகையிலான பேச்சு எது?' என விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவையும் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்தார்.
SC wanted Karimganj Warrant case posted to 22nd June. Jethmalani who appeared for me asked leave to approach CJI for a new Bench. Okayed
— Subramanian Swamy (@Swamy39) June 8, 2015
இந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகத சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை கரீம்கஞ்ச் நீதிமன்றம் கடந்த 1-ந் தேதி பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டிருந்தார்.
இம்மனு மீதான விசாரணை நீதிபதி அமிதவா ராய் தலைமையிலான பெஞ்ச் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. சுப்பிரமணியன் சுவாமிக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜரானார்.
இன்றைய விசாரணையின் போது, சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை வேறு நீதிபதி பெஞ்சுக்கு மாற்றுவதாகவும் அதன் மீது வரும் 22-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி அமிதவா ராய் உத்தரவிட்டார். அப்போது குறுக்கிட்ட ராம்ஜேத்மலானி, அதற்குள் சுப்பிரமணியன் சுவாமி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அந்த பெஞ்ச், 22-ந் தேதி வரை எதுவும் நடைபெறாது என்று கூறினார். அதே நேரத்தில் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தது.
அத்துடன் இது தொடர்பாக தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்துவிடம் முறையிடலாம் என்றும் சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதியும் அளித்தது அமிதவா ராய் தலைமையிலான பெஞ்ச். இதனால் சுப்பிரமணியன் சுவாமி உடனடியாக கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.