கேரளாவில் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்குமாம் – வானிலை மையம் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.
திருவனந்தபுரம், வலியதுறை, செறியதுறை, விழிஞ்சம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று முன் தினம் பெய்த மழையால் திருவனந்தபுரம் நகரம் ஸ்தம்பித்தது. நேற்றும் மழை நீடித்ததால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.
தைக்காடு, கன்ணுமாமூலை, எஸ்.எஸ்.கோவில் ரோடு, தம்பானூர் பகுதிகளில் உள்ள சாலைகளில் முட்டளவுக்கு வெள்ளம் ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.
திருவனந்தபுரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மந்திரி சிவகுமார் தலைமையில் அதிகாரிகள் விரைந்துச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மழை வெள்ளத்தால் திருவனந்தபுரம் நகருக்குள் மட்டும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலையிலும் திருவனந்தபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதுபற்றி திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும் போது, கேரளாவின் தென்மாவட்டங்களில் இன்னும் 48 மணி நேரத்திற்கு கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். அவர்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.