வடகிழக்கு மாநிலங்களில் கொட்டும் கனமழை.. அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் மிதக்கும் 19 மாவட்டங்கள்
திஸ்புர்: கேரளா, அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அசாமில் 19 மாவட்டங்கள் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவுவதை தடுக்க ராணுவத்தினர் மூலம் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அசாம், பீகார் மாநிலங்களில் மழை பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174-ஆக அதிகரித்துள்ளது. நிவாரண முகாம்களில் 1 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கிய நிலையில் கடந்த 1 வாரமாக கனமழை கொட்டி வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கன்னூர் மாவட்டங்களில் கனமழையால் நேற்று வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தாழ்வான பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்
ஏராளமான வாழை மற்றும் தென்னை மரங்கள் வெள்ளநீரில் சேதமடைந்தன. அதே போல நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் பெரும் சிரமப்பட்டனர்.

தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கியதால் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. ரத்தினகிரி, ராய்கட் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிககனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications