ஜெ. மேல்முறையீட்டு வழக்கு: அன்பழகன் மனு மீது பவானிசிங் பதிலளிக்க கர்நாடகா ஹைகோர்ட் உத்தரவு!
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு பவானிசிங் பதிலளிக்க வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கறிஞராக ஆஜரான பவானி சிங்கே, இதிலும் ஆஜராகி வருகிறார்.
பவானிசிங்கை நீக்கக்கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த பைரரெட்டி கடந்த 19-ந் தேதி விசாரித்தார். அப்போது "அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் நியமனம் குறித்து மனுதாரர் அன்பழகனோ, கர்நாடக அரசோ உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் ஆர்.கே.தேசாயிடம் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் புதிய மனு(ரிட்) ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
"இவ்வழக்கின் நீதிபதி நியமனம், அரசு வழக்கறிஞர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் தனது வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் பவானிசிங்கை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை நியமித்துள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
எனவே உடனடியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங்கை அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அவசர வழக்கு
இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கே.எல்.மஞ்சுநாதாவிடம் தி.மு.க. தரப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த ரிட் மனு மீதான விசாரணை நீதிபதிகள் மஞ்சுநாதா, சுஜாதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், பவானிசிங் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.