கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் மோடி மயம்.. அத்வானி ஒதுங்கிறலாமே!
டெல்லி: அடுத்தடுத்து வரும் கருத்துக் கணிப்புகளில் மோடி மயமாகவே இருக்கிறது. மேலும், கிட்டத்தட்ட எல்லாக் கருத்துக் கணி்ப்புகளுமே அடுத்து மத்தியில், தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் சொல்லி வருகின்றன. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானி போட்டியிடத் தான் வேண்டுமா என்ற கேள்விகள் பாஜகவிலேயே எழுந்துள்ளன.
கருத்துக் கணிப்பு தரும் பூஸ்ட்
அடுத்தடுத்து வரும் கருத்துக் கணிப்புகள், பாஜகவுக்கு உற்சாகம் தருபவையாகவே உள்ளன. காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவும் என்று இவை கூறுவதே அதற்குக் காரணம்.
இரு தோல்விக்குப் பின் ஒரு பெரும் வெற்றி
அடுத்தடுத்து 2 பொதுத் தேர்தல்களில் மண்ணைக் கவ்விய பாஜகவுக்கு வரப் போகும் தேர்தலில் பெரும் வெற்றி கிடைக்கும் என்ற தகவல் மகிழ்ச்சி தரத்தான் செய்யும்.
மோடியால் வந்ததா இந்த புது செல்வாக்கு
கடந்த 2 தேர்தல்களில் பாஜகவால் வெல்ல முடியாத நிலையில் தற்போதைய தேர்தலில் மட்டும் அதற்கு எப்படி வெற்றி வாய்ப்பு கூடி வருகிறது என்ற கேள்வியும் எழச் செய்கிறதுதான். இதற்கு மோடிதான் முக்கியக் காரணம் என்ற பேச்சுக்களும் கூடவே கிளம்பத்தான் செய்கிறது.
மோடிதான் வந்தாச்சே.. அத்வானி எதற்கு
இந்தக் கேள்வி பாஜகவினர் மத்தியில் தற்போது வலுப்பெற ஆரம்பித்துள்ளதாம். மோடிதான் புதிய உத்வேகத்தையும், இழந்த செல்வாக்கையும் மீட்டு விட்டாரே, இதற்கு மேலும் அத்வானி நமக்குத் தேவையா என்று பாஜகவினர் மத்தியில் பேச்சு நிலவுகிறதாம்.
பேசாமல் அத்வானியை மறந்துடலாமா...
எனவே அத்வானிக்கு ஓய்வு கொடுத்து விட்டு மோடி தலைமையில் புதிய நடை போடலாமே என்ற எண்ணம் கிளம்பியுள்ளதாம்.
வாரிசுப் போர்
பாஜகவில் அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக ரொம்ப காலமாகவே போட்டி இருந்து வந்துள்ளது. முன்பு வாஜ்பாய் நல்ல வலுவுடன் இருந்தபோதே அது வெடித்தது.
பிரமோத் மகாஜன் முதல் சுஷ்மா வரை
அத்வானி, பிரமோத் மகாஜன், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி என பலரும் வாஜ்பாய் விட்ட இடத்தைப் பிடிக்க முண்டியடித்தவர்கள்தான். ஆனால் சத்தமே போடாமல் மோடி அந்த இடத்துக்கு வந்து விட்டார் என்பதுதான் உண்மை.
சண்டை பெரிதாகமல் தப்பியதே பெருசாச்சே...
வாஜ்பாய்க்கு அடுத்து யார் என்ற சண்டை அவ்வப்போது தொடர்ந்து வெடித்தபடி இருந்தாலும் கட்சி உடையாமல், பெரிய அளவில் பஞ்சாயத்து வராமல் பாஜக தப்பியதே பெரிய விஷயம்தான். இப்போது மோடியை மையமாக வைத்து பாஜக வளைந்திருக்கிறது... அத்வானி மட்டும் தனிமையில்.
பாஸ் ஆகலாம்.. ஆனால் மாஸ் இல்லையே
மோடியைத் தவிர்த்துப் பார்த்தால், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி போன்றோர் நல்ல தலைவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு மாஸ் ஆதரவு இல்லை.. அதாவது மக்களின் தலைவர்களாக அவர்கள் வர முடியாத நிலை.
செளகான் இருக்கிறார்.. ஆனால்
மோடியைத் தவிர்த்துப் பார்த்தால் பாஜகவில் நல்ல செல்வாக்குடைய தலைவர் என்று ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செளகானைக் கூறலாம். நல்ல நிர்வாகி, தலைவர், முதல்வர் என்று இவருக்கு போனஸ் விஷயங்களும் உள்ளன.
இவர்களும் மோடியை ஆதரிக்கிறார்களே
செளகான் உள்ளிட்டோர் இருந்தாலும் கூட அவர்களே கூட மோடிக்கு ஆதரவாக மாறிப் போனதுதான் விந்தையானது. இத்தனைக்கும் செளகானை முன்னிறுத்த டெல்லியில் பலர் முயன்றபோது வலியக்க வந்து மோடிக்கு ஆதரவு கொடுத்தவர் செளகான் என்பது குறிப்பிடத்தக்கது... ஆனால் மோடி தன்னைத் தவிர வேறு யாரையும் முன்னிறுத்த முன்வராதவர்.
மறுபடியும் சீட் கிடைக்குமா அத்வானிக்கு...
இந்த நிலையில்தான் 86 வயதாகும் அத்வானி வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். அப்படியே போட்டியிட்டாலும் அவர் குஜராத்தில்தான் போட்டியிடுவார். ஆனால் அவருக்கு சீட் தருவார்களா என்ற கேள்வியும் தற்போது பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
ஓய்வு கொடுக்கலாம்
அத்வானியின் சேவை போதும் என்ற முடிவெடுத்து அவருக்கு ஓய்வு கொடுக்கும் யோசனையும் பாஜக தலைமைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம்.. என்ன நடக்கப் போகிறது என்று..அரசியலில் எதுவும் நடக்கலாம்.. அதிலும் பாஜகவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.