ஹிஜாப் Vs காவி துண்டு: கர்நாடகாவில் தீவிரமாகும் ஆடை விவகாரம் - அடுத்தது என்ன?
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கும் இந்து மாணவர்கள் காவி நிற துண்டு அணிவதற்கும் இடையிலான மோதல் விவகாரம் கர்நாடகான் பிற பகுதிகளுக்கும் பரவிய நிலையில், வகுப்புவாத பிரச்னை ஏற்படாமல் தடுக்க அங்கு இரண்டு பல்கலை முன் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மற்றொரு கல்வி நிறுவனத்தில் ஹிஜாப் அணிந்த மாணவர்கள் தனி வகுப்பறைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த காலங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த போது யாரும் எதுவும் தெரிவிக்காத நிலையில், இப்போது அதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதிப்பதாக மாணவிகளின் முறையிடுகின்றனர். அதேநேரம் கல்லூரிகளில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே சீரான ஆடையைத்தான் அணிய வேண்டும் என்றும் மத சடங்குகளை மாணவ - மாணவிகள் தங்கள் வீடுகளில் பின்பற்றிக்கொள்ளலாம் என்றும் அம்மாநில அமைச்சர்கள் கூறி வருவது சர்ச்சையைப் பெரிதாக்கி வருகிறது.
மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிராக காவி நிற துண்டை தோளில் போட்டுக் கொண்டு சில மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்தனர். இதேவேளை, ஹிஜாப் உரிமை கோரிய பெண்கலுக்கு ஆதரவாக சில மாணவிகள் நீல நிற ஹிஜாப் அணிந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தினர். வாயில்களுக்கு வெளியே ஹிஜாப் அணிந்த மாணவிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபூரில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரி இன்று காலையில் அதன் மாணவிகளை வளாகத்திற்குள் அனுமதித்தது. ஆனால் அவர்களுக்கு எந்த பாடமும் இல்லாமல் தனி வகுப்பறைகளில் அமர வைத்த நிர்வாகத்தின் செயல்பாடு சர்ச்சையானது.பள்ளியின் முதல்வர் ராமகிருஷ்ண ஜி.ஜே, ஹிஜாபை மாணவிகள் அகற்றினால் வகுப்புகளுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் மாணவிகள் வகுப்பில் ஹிஜாபை கழற்ற மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.
- கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை: சீருடை கட்டாயம் என அரசு ஆணை
- பள்ளியில் ஹிஜாபுக்கு அனுமதி மறுப்பது மத சுதந்திர தலையீடாகுமா?
குந்தாப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது குறித்து அந்த பள்ளயின் துணை முதல்வர் உஷா தேவி கூறுகையில், "மாணவிகளை வீட்டுக்குத் திருப்பி அனுப்பினோம். ஹிஜாப் அணியாமல் வகுப்புகளுக்குச் செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். அதனால் அவர்களை வெளியேறச் சொன்னோம். இந்த விஷயத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு வரும்வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டோம்," என்று கூறினார்.கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மற்ற இரண்டு கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த சக மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல மாணவர்கள் காவி நிறத்தில் துண்டு போட்டுக் கொண்டு வந்தனர். இந்த நிலையில், அந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் வந்து, இந்த விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் பிப்ரவரி 8ஆம் தேதி உத்தரவிடும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை வகுப்புகளுக்கு விடுமுறை என்று கூறி விட்டுச் சென்றார்.
உடுப்பியில் உள்ள அரசு முன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த 5 பெண்கள் ஹிஜாப் தடைகளை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் ஹிஜாப் போராட்டம் தொடங்கியது, அப்போது 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வந்தபோது அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. உடுப்பி மற்றும் சிக்கமகளூருவில் உள்ள வலதுசாரி குழுக்கள் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவதை எதிர்த்தனர்.உடுப்பி மற்றும் அதற்கு அப்பால் உள்ள உயர்நிலை பள்ளிகளிலும் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. அவற்றில் வகுப்புறைகக்குள் ஹிஜாப் அணிவது தடை செய்யப்பட்டது. முஸ்லிம் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு எதிராக பல மாணவர்கள் காவி நிற துண்டை தோளில் போட்டுக் கொண்டு, ஹிஜாப் எதிர்ப்பு முழக்கத்தை எழுப்பினர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் "சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்" எனக் கூறி வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதித்ததுஇது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "நிர்வாகக் குழு சீருடையை தேர்வு செய்யாத பட்சத்தில், சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான ஆடைகளை அணியக் கூடாது' என கூறப்பட்டுள்ளது.
"சில கல்வி நிறுவனங்களில், ஆண்களும் பெண்களும் தங்கள் மதத்தின்படி நடந்துகொள்வதைக் கல்வித்துறை கவனித்துள்ளது, இது சமத்துவத்தையும் ஒற்றுமையையும் பாதிக்கிறது," என்றும் அரசாங்கம் கூறியது.இந்த நிலையில், பள்ளி மாணவிகள் மட்டத்தில் நடந்து வந்த ஹிஜாப் போராட்டம், பாஜக மற்றும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) தலையீடுக்குப் பிறகு வலதுசாரிகள் நடத்தும் போராட்டமாக உருவெடுத்தது. இதனால் மாநிலத்தில் வகுப்புவாத கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது. "அரசியலமைப்பு எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது, அதாவது ஒருவர் தங்கள் மதத்திற்கு ஏற்ப எந்த ஆடையையும் அணியலாம். "ஹிஜாப் அணிந்து மாணவிகள் பள்ளிக்குள் நுழைவதைத் தடை செய்வது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்" என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறினார்.இதேவேளை, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை அரசு அனுமதிக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்."இந்த மாநிலத்தில் பாஜக அரசு உள்ளது. ஹிஜாப் அல்லது பிற வகை அனுமதக்கப்படாத ஆடை அணிய இடமில்லை. பள்ளிகள் அன்னை சரஸ்வதி (கல்வியின் தெய்வம்) கோயில்கள்; அங்கு அனைவரும் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். இதற்குள் மதத்தை கொண்டு வருவது சரியல்ல. மாணவர்களுக்குத் தேவையானது கல்வி, யாராவது விதிகளைப் பின்பற்ற முடியாவிட்டால், அவர்கள் வேறு எங்காவது தங்கள் பாதையைத் தேர்வு செய்யலாம், "என்று அவர் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தை அடைந்த சர்ச்சை
ஹிஜாப் அணிவது குறித்த வழக்கு விசாரணை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் தாக்கல் செய்துள்ள இரண்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியுள்ளது. இரண்டும் வெவ்வேறு பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டவை.
அரசியலமைப்புச் சட்டத்தின் 25 (1) பிரிவின் கீழ் ஆடையைத் தேர்ந்தெடுப்பது அடிப்படை உரிமை என்று ஒரு மனுவில் வாதிடப்பட்டுள்ளது.
ஹிஜாப் மீது விதிக்கப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாடு, சமூகத்தின் சட்டம் ஒழுங்கு அல்லது ஒழுக்கத்திற்காக அல்ல என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஐந்து மாணவிகள் தாக்கல் செய்த இரண்டாவது மனுவில், 2021-22 ஆம் ஆண்டிற்கான கல்வி வழிகாட்டுதல்களில், ப்ரீ யுனிவர்சிட்டி கல்லூரிகளுக்கு சீருடை எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கல்லூரி சீருடையை முடிவு செய்தால், அதற்கு எதிராக துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தலையில் ஸ்கார்ஃப் அணியலாம் என்ற ஒற்றை நீதிபதி அடங்கிய நீதிமன்றப்பிரிவு அளித்த தீர்ப்பை உறுதி செய்து கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பை இரண்டு மனுக்களும் குறிப்பிடுகின்றன.
"முன்பு ஒன்று அல்லது இரண்டு மாணவிகள் உடல் நலம் கருதி இதை அணிந்தனர். ஆனால் தற்போது திடீரென 27 மாணவிகளும் அணியத் துவங்கியுள்ளனர்," என்று குண்டாப்பூர் எம்.எல்.ஏ., ஹலாதி ஸ்ரீனிவாஸ் ஷெட்டி கூறினார்.
"அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன் அறிக்கை இன்னும் வரவில்லை. கல்வி ஆண்டு முடிவடையும் நிலையில் நாம் இருக்கிறோம். அறிக்கை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒட்டுமொத்தமாக நிலைமை நன்றாக இல்லை, "என்று ஷெட்டி தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம்; இந்தியாவில் 2 நாள் தேசிய துக்கம்
- தெற்கு ரயில்வே புது வழித் தடங்களுக்கு ரூ.308 கோடி, வடக்கு ரயில்வேவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி: சு.வெ. புகார்
- போர்களை புதிய யுகத்துக்கு இட்டுச் செல்லும் ட்ரோன்கள்: ராணுவங்களுக்கு பயங்கர சவால்
- போலீஸ் பணியில் இருக்கும்போதே பிஎச்.டி. முடித்து உதவிப் பேராசிரியர் ஆன நெல்லை இளைஞர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்