இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகு.. துணை முதல்வரான முகேஷ் அக்னி ஹோத்ரி!
சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுக்விந்தர் சிங் சுகு இன்று இமமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 75 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.
இந்த ஓட்டுக்கள் கடந்த 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியில் இருந்த பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தியது.
இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங். ஆட்சி-புதிய முதல்வர் ரேஸில் 7 'தலைகள்'- இன்று முடிவு அறிவிப்பு!
40 இடங்களில் வென்ற காங்கிரஸ்
மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வென்றது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. மேலும் 3 சுயேச்சைகள் வெற்றி பெற்ற நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
தொடரும் டிரெண்ட்
இமாச்சல பிரதேச மாநிலத்தை பொறுத்தமட்டில் கடந்த 1985ம் ஆண்டுக்கு பின்னர் எந்த ஒரு ஆளும் கட்சியும் மீண்டும் அடுத்த தேர்தலில் வென்றது இல்லை. இந்த தேர்தலிலும் அந்த டிரெண்ட் அப்படியே தொடர்ந்தது. அதன்படி பாஜக ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.
முதல்வராக சுக்விந்தர் சிங் தேர்வு
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், அக்கட்சியின் மூத்த தலைவரான சுக்விந்தர் சிங் சுகுவை முதல்வராக தேர்ந்தெடுத்தது. காங்கிரஸில் பலரும் முதல்வர் பதவியை எதிர்பார்த்தனர். குறிப்பாக எம்.பி.யும் மறைந்த முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங்கின் மனைவியுமான பிரதிபா பெயர், முதல்வர் பதவிக்கு அடிபட்டது. ஆனால் சுக்விந்தர் சிங் சுகுவை காங்கிரஸ் மேலிடம் முதல்வராக அறிவித்தது. இதனை ஏற்பதாகவும் பிரதிபா தெரிவித்தார்.
முதல்வர்-துணை முதல்வர் பதவியேற்பு
முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுக்விந்தர்சிங் சுகு, மாநில ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி இன்று மதியம் இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக பதவியேற்றார். பிரதிபாவின் ஆதரவாளர்களில் ஒருவரான முகேஷ் அக்னி ஹோத்ரி துணை முதல்வராகவும் பதவியேற்றார். இருவருக்கும் ஆளுநர் ஆர்வி அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
ராகுல்-பிரியங்கா காந்தி பங்கேற்பு
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் மட்டுமே பொறுப்பேற்றுள்ள நிலையில் விரைவில் அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.