அஸ்ஸாம் புதிய முதல்வராக தேர்வு- பாஜக மேலிடத்துடன் மல்லுகட்டி சாதித்தேவிட்டார் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில முதல்வராக ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். குவஹாத்தியில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா ஒருமனதாக சட்டசபை குழுத் தலைவராக தேர்வானார்.
126 இடங்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களில் வென்றது.
காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கு 50 இடங்கள்தான் கிடைத்தது. இதனால் அஸ்ஸாமில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும் யார் முதல்வர் என்பதில்தான் பிரச்சனை ஏற்பட்டது?

முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டு
கடந்த முறை முதல்வராக இருந்த சர்பானந்த சோனாவால் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அதேநேரத்தில் பாஜகவின் வெற்றிக்காக வியூகம் வகுத்து பாடுபட்ட ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவும் முதல்வர் பதவிக்காக மல்லுக்கட்டினார். இதனையடுத்து டெல்லிக்கு ஹிமந்த பிஸ்வாஸ் வரவழைக்கப்பட்டார்.

டெல்லியில் ஆலோசனை
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோருடன் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளில் தமக்கு முதல்வர் பதவி கொடுத்தாக வேண்டும் என்பதில் ஹிமந்த திட்டவட்டமாகவே இருந்துவிட்டார்.

சர்பானந்த ராஜினாமா
இதனால் இன்று குவஹாத்தி திரும்பிய சர்பானந்த சோனாவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பார்வையாளராக நரேந்திரசிங் தோமர் பங்கேற்றார்.

முதல்வராக ஹிமந்த தேர்வு
இக்கூட்டத்தில் அஸ்ஸாம் பாஜக சட்டசபை குழு தலைவராக ஒருமனதாக ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதனால அஸ்ஸாமின் புதிய முதல்வராக ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பதவியேற்க உள்ளார். அவரது தலைமையிலான அமைச்சரவை விவரங்கள் விரைவில் வெளியாகும் என்பது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications