காஷ்மீராக மாறிய பெங்களூரு... ஊரடங்கு உத்தரவை மிரட்சியுடன் பார்த்த மக்கள் #bengaluru
பெங்களூரு: நம்ம பெங்களூரு என்று பெருமையுடன் கூறி வந்த மக்களுக்கு, நம்ம பெங்களூரா இது என்ற மிரட்சியையும், அதிர்ச்சியையும் கொடுத்து விட்டனர் காவிரி வன்முறையாளர்கள்.
கல்வீச்சு, தீவைப்பு, அடிதடி என்று அதகளப்படுத்தி விட்டனர் காவிரிப் போராட்டக்காரர்கள். இனவெறியைத் தூண்டும் வகையிலான இந்தத் தாக்குதலால் ஒட்டுமொத்த இந்தியாவுமே பெங்களூரைப் பார்த்து ஆச்சரியப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. அதை விட முக்கியமாக இந்த தலைமுறை பெங்களூர் மக்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு பெரும் மிரட்சியையும், அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்து விட்டது.
பெங்களூரில் ஊரடங்கா என்றுதான் பலரும் ஆச்சரியப்பட்டனர். தோட்ட நகரம், பூங்கா நகரம் என்று பெருமை பேசி வந்த நிலையில் இன்று பெங்களூர் வன்முறைக் களமாக மாறி விட்டது பலருக்கும் வேதனையையே அளித்தது.
16 இடங்களில் ஊரடங்கு
ராஜகோபால் நகர், காமாட்சிபாளையா, விஜய்நகர், பைதராயன்புரா, கெங்கேரி, மாகடி சாலை, ராஜாஜி நகர், ஆர் ஆர் நகரா, கேபி அக்ரஹாரா, சந்திரா லேஅவுட், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லே அவுட், பீன்யா, ஆர்எம்சி யார்டு, நந்தினி லே அவுட், ஞானபாரதி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
நாளை வரை நீட்டிப்பு
திங்கள்கிழமை இரவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதி மக்கள் இந்த ஊரடங்கைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர், மிரட்சி அடைந்தனர்.
ஆள் நடமாட்டமே இல்லை
இந்தப் பகுதிகளில் உள்ள தெருக்களில் ஆள் நடமாட்டமே இல்லை. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. சிலர் காலையில் வெளியில் வந்தனர். ஆனால் ரோந்து வந்த புற ராணுவப் படையினர் அவர்களை வீடுகளுக்குப் போகுமாறு எச்சரித்து அனுப்பினர்.
ஊரடங்கு தளர்வு எப்போ
பலருக்கு எப்போது ஊரடங்கு தளர்த்தப்படும், எப்போது வெளியே வரலாம் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சில இடங்களில் காலை 6 மணிக்கு ஊடரங்கு தளர்த்தப்பட்டது. எனவே மக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க அலை மோதினர். ஆனால் 9 மணிக்கு ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வந்தது.
அடங்காத ஹெக்கனஹள்ளி
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் பெரும்பாலும் அமைதி நிலவியது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடந்த ஹெக்கனஹள்ளி பகுதியில் மட்டும் வன்முறை ஓயவில்லை. ஊரடங்கையும் மீறி அங்கு வன்முறையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல விஜய்நகரிலும் சில இடங்களில் பரபரப்பு காணப்பட்டது.
வியாபாரிகளுக்கு செம லாபம்
எப்போதுமே இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில்தான் வியாபாரிகள் கல்லா கட்டுவார்கள். சென்னை வெள்ளத்தில் தத்தளித்தபோது அதை பார்த்தோம். அதேபோல பெங்களூரிலும் வியாபாரிகள் வெளுத்துக் கட்டி விட்டனர். பால் விலையை கூடுதலாக வைத்து விற்றுள்ளனர். ஆனால் பரவாயில்லை, 1 ரூபாய், 2 ரூபாய்தான் அதிகம் வைத்துள்ளனர். தக்காளி விலையும் கூடுதலாக இருந்ததாம்.
நடமாடும் கடைகள் அதிகரிப்பு
பல பகுதிகளில் தள்ளுவண்டிகளில் காய்கறி உள்ளிட்டவற்றை வைத்து விற்றதைக் காண முடிந்தது. 3 மணி நேரம் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட்டது என்பதால் அதற்குள் வியாபாரம் செய்து விட வேண்டும் என்ற வேகத்தில் வியாபாரிகள் இருந்தனர். மக்களும் சொன்ன விலைக்கு வாங்கும் நிலையில் இருந்தனர்.
வெறிச்சோடிய தெருக்கள், சாலைகள்
ஊரடங்கு நேரத்தின்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் பல பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. தெருக்களில் ஆள் நடமாட்டமே இல்லை. 1991 கலவரத்தின்போது இப்படித்தான் பெங்களூரு இருந்தது என்பது பழைய பெங்களூருக்காரர்களுக்கு மனதில் வந்து போனது. அதேபோல நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோதும் இதேபோலத்தான் பெங்களூரு காணப்பட்டது. ராஜ்குமார் மறைவின்போதும் இப்படித்தான் இருந்தது பெங்களூரு.
வாகனப் போக்குவரத்து இல்லை
பஸ்கள் இல்லை, கார்கள் ஓடவில்லை, பைக்குகள் ஓடவில்லை. சிறார்கள் கூட தெருவில் கிரிக்கெட் விளையாடவில்லை. எந்த சந்தடியும் இல்லை. எப்போதும் நெரிசலாக காணப்படும் பகுதிகள் வெறிச்சோடிக் கிடந்தது பெங்களூர் மக்களுக்கு நிச்சயம் பெரும் அதிர்ச்சி + ஆச்சரியம் என்பதில் சந்தேகம் இல்லை.
பலரது மனதில் இந்தப் போராட்டங்களால் யாருக்கு என்ன பயன் என்ற கேள்வியும் எழுந்தது!