ஜெ. பாணியில் விரிக்கப்பட்ட வலை.. விட்ட இடத்தை கெட்டியாக பிடித்த மம்தா பானர்ஜி.. ஒருமுறைதான் தவறும்!
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பவானிப்பூர் தொகுதியில் இருந்து மீண்டும் எம்எல்ஏ ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உருவாகி உள்ளது. பாஜக வேட்பாளர் ப்ரியங்கா டிப்ரேவாலை வீழ்த்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் வாய்ப்பை மம்தா பெற்றுள்ளார்.
Recommended Video
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட அரசியல் வீழ்ச்சிக்கு இன்று மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். சட்டசபை தேர்தலில் 213 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து இருந்தாலும் தனிப்பட்ட வகையில் நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தது மம்தாவிற்கு மாபெரும் இழுக்காக பார்க்கப்பட்டது.
முதல்வரே தோல்வி அடைந்துவிட்டார்.. தேர்தலில் ஜெயித்து என்ன பலன் என்பது போல மம்தாவின் தோல்வியை பாஜக கடுமையாக கிண்டல் செய்தது. தேர்தலில் தோற்றுவிட்டோம் என்பதை விட.. தனது முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான சுவேண்டு அதிகாரியிடம் தோல்வி அடைந்து விட்டோமே என்பதுதான் மம்தாவிற்கு பெரிய வருத்தமாக இருந்தது.
பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட பொருட்கள்.. உங்கள் கைக்கு வரவேண்டுமா.. அப்ப இதைச் செய்யுங்கள் முதலில்..!
தேர்தல்
மம்தாவின் இடது கையாக பார்க்கப்பட்டவர் சுவேண்டு அதிகாரி. பல காலமாக மம்தாவிற்கு நெருக்கமாக பார்க்கப்பட்ட அதிகாரி குடும்பம் சரியாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் பாஜகவில் ஐக்கியம் ஆனதை மம்தாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் அதிகாரியை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மம்தா தேர்தல் பணிகளை மேற்கொண்டார். பாஜகவும் மம்தாவிற்கு எதிராக அதிகாரியை முக்கிய தலைவராக முன்னிறுத்தியது.
எப்போதும் போட்டியிட்டும் இடம்
சுவேண்டு அதிகாரியை எதிர்த்து வெற்றிபெற முடியுமா என்று பாஜகவும் நேரடியாக மம்தாவிற்கு சவால்விட்டது.
இங்குதான் பாஜக வீசிய வலையில் மம்தா சிக்கினார் என்று சொல்ல வேண்டும். பாஜக விடுத்த சவால் காரணமாக, களநிலவரம் தெரியாமல் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா ஒப்புக்கொண்டார். அதற்கு முன் மம்தா போட்டியிடாத இடம் அது. இரண்டு முறை அந்த தொகுதியில் இருந்து சுவேண்டு அதிகாரி போட்டியிட்டு வென்று இருக்கிறார். அங்கு அவருக்கு மக்கள் ஆதரவு அதிகம்.
பாஜக
ஆனால் பாஜகவின் சவால் காரணமாகவும், சுவேண்டு அதிகாரியை வீழ்த்த வேண்டும் என்று கோபம் காரணமாகவும் சரியாக கள நிலவரம் தெரியாமல் மம்தா பானர்ஜி நந்திகிராமில் களமிறங்கி தோல்வி அடைந்தார். நந்திகிராமில் 2007ல் சிபிஎம் கூட்டணி அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி போராட்டம் செய்தார். அங்கு விவசாயிகள், பொதுமக்கள் நிலத்தை தொழிற்சாலைகள் அமைக்க அரசு கையகப்படுத்துவதற்காக எதிராக மம்தா போராட்டம் செய்தார். இந்த போராட்டத்தில் 14 பேர் போலீசார் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாஜக விரித்த வலை
இந்த நந்திகிராம் போராட்டம்தான் மம்தாவிற்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தது. 2011 சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வென்று மம்தா ஆட்சியை பிடிக்க இந்த போராட்டமே காரணமாக இருந்தது. இதனால் நந்திகிராம் தொகுதியில் தனக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என்று நம்பி மம்தா போட்டியிட்டார். பாஜகவும் இதைத்தான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தது. ஏனென்றால் கள நிலவரம் சுவேண்டு அதிகாரிக்கு சாதமாக இருந்தது. எதிர்பார்த்ததை போலவே சுவேண்டு அதிகாரியிடம் வெறும் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா தோல்வி அடைந்தார்.
பவானிபூர்
நந்திகிராம் தோல்வி மம்தாவிற்கு பெரிய அரசியல் அவமானமாக பார்க்கப்பட்டது. அவரின் சொந்த தொகுதியான பவானிபூரை விட்டுவிட்டு நந்திகிராமில் மம்தா போட்டியிட்டது தவறான அரசியல் முடிவாக விமர்சிக்கப்பட்டது. 2011, 2016 தேர்தல்களில் பவானிபூரில் இருந்துதான் மம்தா வெற்றிபெற்றார். ஆனால் சுவேண்டு அதிகாரியை வீழ்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டு நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா, பாஜகவின் அரசியல் வலையில் வீழ்ந்து தோல்வி அடைந்தார். இப்போது ஒருவழியாக பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
ஜெயலலிதாவிற்கு வலை
துண்டு ஒருமுறைதான் தவறும் என்று சொல்லும் அளவிற்கு, மீண்டும் பவானிபூரில் தனது லெகசியை மீட்டு எடுக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. முன்பு ஜெயலலிதாவும் இதேபோல்தான் 1996 சட்டசபை தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். திமுகவின் சுகவனத்திடம் ஜெயலலிதா இதேபோல்தான் தோல்வி அடைந்தார். சரியாக களநிலவரத்தை கணிக்காமல் அவர் போட்டியிட்டது, தோல்விக்கு காரணமாக இருந்தது.
மீண்டு வந்தார்
ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் இந்த தோல்வி ஒரு கறையாக இருந்தது. அதேபோல் ஒரு தோல்வியைத்தான் நந்திகிராமில் மம்தா சந்தித்தார். ஆனால் வேகமாக 4 மாதங்களுக்குள் மீண்டும் வந்து தற்போது பவானிபூரில் வெற்றிக்கொடி நாட்டும் வாய்ப்பை மம்தா பெற்று இருக்கிறார். தேசிய அரசியலில் கால்பதிக்க போகும் மம்தாவிற்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி பெரிய அளவில் உத்வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!