ஜெ. சொத்துக் குவிப்பு: 1 ரூபாய் சம்பளத்தில் ரூ.14 கோடி கட்டிடம் கட்டியது எப்படி?
பெங்களூர்: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது இரண்டு ஆண்டுகள் மாதம் ஒரு ரூபாய் வீதம் 24 ரூபாய்தான் சம்பளம் வாங்கினார். ஆனால், ரூ.14 கோடி மதிப்புள்ள கட்டிடங்களை கட்டியுள்ளார்.
மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ரூ.90 லட்சம் மதிப்புள்ள 23 கிலோ தங்கம், வைர ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கல் டிகுண்ஹா முன் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்களிக்கக் கோரி அவர்களது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நான்காவது நாளாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் வாதம் தொடங்கினார்.
அப்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களை வாடகை கொடுத்த ராகவன், பிரபால்குமார் ரெட்டி, ஷீலாடோனி, சீனிவாசன், சண்முகம், பாலசந்திரன், கிருஷ்ணகுமார் ரெட்டி, சொர்ணம் ஆகியோர் கொடுத்த சாட்சியங்களை பவானிசிங் படித்து காட்டினார்.

போயஸ் கார்டன் வீடு
போயஸ் கார்டன் வீடு மதிப்பு ரூ.7.30 கோடி. சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான நிலம், கட்டிடம், தொழிற்சாலை உள்பட பலவற்றை மதிப்பீடு செய்வதற்காக லஞ்ச- ஒழிப்பு போலீசாரின் சிபாரிசின் பேரில் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மதிப்பீட்டாளர்கள் மகாபலிபுரம் சாலை, ஈக்காட்டுதாங்கல், நீலாங்கரை, பையனூர், போயஸ் கார்டன் உள்பட பல இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து தாக்கல் செய்துள்ளனர்.

பல கோடி சொத்துக்கள்
இந்த அறிக்கையில் சிறுதாவூரில் உள்ள பங்களாவின் மதிப்பு ரூ.5 கோடியே 40 லட்சத்து, 52 ஆயிரத்து 299 என்றும், பையனூர் பங்களாவின் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் என்றும், நமது எம்.ஜி.ஆர். நிறுவனத்திற்கு சொந்தமான சொத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 457 என்று தமிழக அரசின் பொதுப்பணி துறையில் முதன்மை பொறியாளராக இருந்த மாரியப்பன் கொடுத்த சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளதாக பவானிசிங் விளக்கினார்.

கம்பெனிகளின் மதிப்பு
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கம்பெனிகளின் மதிப்பு ரூ.3 கோடியே 05 லட்சத்து 88 ஆயிரத்து 195 என்று கூறியுள்ளதை படித்து காட்டிய அவர், தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மதிப்பீட்டாளர் ஜெயபால் கொடுத்துள்ள சாட்சியத்தில் ஈக்காட்டுதாங்கலில் ரூ.20.43 லட்சம், சோழிங்கநல்லூரில் ரூ.29.59 லட்சம், மையிலாப்பூரில் ரூ.53.11 லட்சம், நந்தனம் பட்டம்மாள் தெருவில் ரூ.80.37 லட்சம், நீலாங்கரையில் ரூ.8 லட்சம், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டின் மதிப்பு ரூ.7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரத்து 625 என்று மதிப்பீடு செய்துள்ளதை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் பாவனிசிங் விளக்கினார்.

நன்கொடைகள் அதிகம்
மேலும் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள மூன்று கம்பெனிகள் மற்றும் அதன் சொத்து மதிப்பு ரூ.76 லட்சத்து 64 ஆயிரத்து 098 என்றும் பவானிசிங் தனது வாதத்தில் தெரிவித்தார்.
நன்கொடைகள் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் தமிழக முதல்வராக இருந்த சமயத்தில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியதாக பல்கலைக்கழக அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார்.

சென்னை மியூசிக் அகாடமிக்கு
சென்னை மியூசிக் அகாடமியின் 5ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டபோது அகாடமிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியதாக அகாடமி செயலாளர் வெங்கடராமன் சாட்சியம் அளித்துள்ளார்.

சொந்த வருமானத்தில் நன்கொடை
சாலை விரிவாக்கப் பணிக்காக தியாகராஜ நகரில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டபோது, ஆஞ்சநேயசாமி கோயில் இடிக்கப்பட்டதை புனரமைப்பதற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.14 லட்சம் வழங்குவதாக அறிவித்ததுடன், ஜெயலலிதா தனது சொந்த வருமானத்தில் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியதாக கோயில் நிர்வாகி சந்தானம் சாட்சியம் அளித்துள்ளார்.

கோவில் கட்ட நன்கொடை
வீராணம் குடிநீர் திட்டத்திற்காக பைப் பதிக்க இடம் தயார் செய்தபோது, தாம்பரம் சானிடோரியம் அருகில் ஹிந்து கோயில் அகற்றப்பட்டது. அதை புனரமைக்க தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ததுடன், ஜெயலலிதா தனது வருமானத்தில் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியதாக கோயில் நிர்வாகி அச்சுதன் சாட்சியம் அளித்துள்ளதை பவானிசிங் புள்ளிவிவரங்களுடன் படித்து காட்டினார்.

சுதாகரன் - சசிகலா
தமிழக வணிகவரி துறை அதிகாரி கண்ணன் கொடுத்துள்ள சாட்சியத்தில், சூப்பர்-டூப்பர் டி.வி நிறுவனத்தின் தலைவரான வி.என்.சுதாகரன், நிர்வாக இயக்குனராக சசிகலா ஆகியோர் உள்ளனர். அதன் அலுவலகம் எண் 25 வெல்லிங்டன் பிளாசாவில் உள்ளது. அந்நிறுவனம் விற்பனை வரி தாக்கல் செய்யவில்லை என்று கூறியுள்ளதை படித்து காட்டினார். மேலும் மற்றொரு வணிகவரி துறை அதிகாரியான சுந்தர்ராஜ் கொடுத்துள்ள சாட்சியத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், மார்பல்ஸ் அண்ட் மார்வல் ஆகிய நிறுவனங்களும் விற்பனை வரி செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

வரிஏய்ப்பு செய்த நிறுவனங்கள்
வணிகவரிதுறை அதிகாரி சீனிவாசமூர்த்தி கொடுத்துள்ள சாட்சியத்தில் வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் நிர்வாகிகளாக இருக்கும் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம் மற்றும் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனமும் விற்பனை வரி செலுத்தவில்லை என்று சாட்சியம் அளித்துள்ளதை விளக்கி வாதிட்டார்.

விதி மீறி வீட்டுமனை
தமிழக வீட்டு வசதி கழக செயலாளர் பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள சாட்சியத்தில், வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரன் மற்றும் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இளவரசி ஆகியோருக்கு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக வீட்டு வசதி கழக விதிமுறைகளை மீறி போலி வருமான வரி சான்றிதழ் பெற்று இருவருக்கும் தலா ஆயிரத்து 800 சதுரஅடி வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளதை ஆதாரங்களுடன் விளக்கி வாதிட்டார்.

சம்பளம் ரூ.24 தங்க ஆபரணம் 23 கிலோ
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் குறித்து மதிப்பீடு செய்யும்படி தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட வாசுதேவன் கொடுத்துள்ள சாட்சியத்தில், எண் 36, போயஸ் கார்டன் வீட்டில் 23 கிலோ 113 கிராம் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.91 லட்சத்து 57 ஆயிரத்து 253 என்றும், வைர ஆபரணங்களில் மதிப்பு ரூ.2 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 790 என்றும் இரண்டும் சேர்த்து மொத்தம் ரூ.3 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரத்து 043 என்று மதிப்பீடு செய்துள்ளார்.

தங்க நகைகள் பறிமுதல்
எண் 31 ஏ போயஸ் கார்டன் வீட்டில் ரூ.47 லட்சத்து 61 ஆயிரத்து 816 மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் ரூ.55 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரத்து 116 வெள்ளி பொருட்கள் மதிப்பீடு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சிவாஜிகணேசன் சாலையில் உள்ள கிரிசண்முகம் வீட்டில் 13 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 94 ஆயிரத்து 382 என்று மதிப்பீடு செய்துள்ளதையும், என்னென்ன ஆபரணங்கள் எவ்வளவு எடை கொண்டது, அதன் மதிப்பு எவ்வளவு என்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.

தங்கமூலாம் கடிகாரங்கள்
மேலும் ஐ.எம். நமாசி கொடுத்துள்ள சாட்சியத்தில், தமிழக லஞ்ச-ஒழிப்பு போலீசாரின் உத்தரவை ஏற்று ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த கை கடிகாரங்களை மதிப்பீடு செய்தேன்.
அதில் 7 கடிகாரங்கள் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டது. ஒன்றில் விலை ரூ.5 லட்சமும், இன்னொன்றின் விலை ரூ.3 லட்சமாக இருந்தது. அந்த கடிகாரங்கள் தங்க முலாம் பூசப்பட்டதுடன், வைர, ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட ரிஸ்ட் கடிகாரங்களாகும். மேலும் 91 கடிகாரங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. மொத்த கடிகாரங்களின் மதிப்பு ரூ.9 லட்சத்து 03 ஆயிரம் என்று சாட்சியம் அளித்துள்ளதை படித்துக் காட்டினார். இந்த கால கட்டத்தில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் ரூ.24 மட்டுமே சம்பளமாக பெற்றாகவும் அவர் தெரிவித்தார்.

386 ஜோடி செருப்புகள்
ஜெயலலிதா வீட்டில் 386 ஜோடி காலணிகள் பறிமுதல் செய்ததாக ஜெம்ஸ் வில்சன் கொடுத்த சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளதையும் தெரிவித்தார். மேலும் ஈபல் லீலாவதி கொடுத்த கொடுத்த சாட்சியத்தில், நமச்சிவாயா ஹவுசிங், அய்யப்பா பிராபர்ட்டிஸ், நவசக்தி கன்ட்ரக்ஷன், ஓசியானிக் கன்ஸ்ரக்ஷன், லெக்ஸ் பிராபர்ட்டிஸ், கிரின் கார்டன் அப்பார்ட்மெண்ட் உள்பட பல நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளதை பவானிசிங் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
அதை தொடர்ந்து அடுத்த விசாரணையை வரும் ஏப்ரல் 2ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications