குஜராத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.. "ஒரே ஒரு ஜாதி".. பாஜக விடாமல் வெல்லும் சூட்சமம் இதுதான்!
காந்திநகர்: குஜராத்தில் 27 வருடமாக பாஜக ஆட்சியில் இருக்கவும்.. அங்கு பாஜகவிற்கு தொடர்ந்து என்ன நடந்தாலும் மக்கள் ஆதரவு அளிக்கவும் மிக முக்கியமான காரணம் இருக்கிறது. அந்த காரணம் ஜாதி! ஒரே ஒரு இடைநிலை ஜாதிதான் அங்கு பெரும்பாலும் தேர்தல் முடிவுகளை மாற்றுகிறது. இந்த இடைநிலை ஜாதியின் நம்பிக்கையை இழந்ததுதான் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சரிவிற்கும். பாஜகவின் மாபெரும் எழுச்சிக்கும் குஜராத்தில் காரணமாக அமைந்தது.. அந்த ஜாதியின் பெயர் பட்டிதார்!
ஆம் பட்டிதார் இனப்பிரிவுதான் குஜராத்தில் இப்போதும் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. மொத்தமாக உள்ள 182 இடங்களில் 60 இடங்களில் வெற்றியை இவர்கள்தான் தீர்மானிப்பார்கள். இந்த 60 இடங்களில் பட்டிதார் ஆதரவை பெற்றால் போதும் மற்ற இடங்களில் வாக்குகளை ஸ்விங் செய்ய வைத்து எளிதாக வெற்றிபெற முடியும். பாஜக குஜராத்தை கோட்டையாக வைத்து இருப்பதும் அப்படித்தான்.
குஜராத்தில் பட்டிதார் இனப்பிரிவு இல்லாமல் வெற்றிபெற முடியாது. அங்கு கடந்த 5 முதல்வர்களை பட்டிதார் இனப்பிரிவு மக்களே தேர்வுசெய்துள்ளனர். அங்கு கடந்த 5 முதல்வர்களின் 4 முதல்வர்கள் பட்டிதார் உட்பிரிவான Leuva பட்டேல் இனப்பிரிவை சேர்ந்தவர்கள் என்றால்.. அந்த ஜாதி பிரிவு எவ்வளவு வலிமையானது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
கொடிகட்டி ஆண்ட குஜராத்தில் காங்.க்கு காத்திருக்கும் பெரும் தோல்வி!சவக்குழி தோண்டிய ஆம் ஆத்மி, ஓவைசி!
மெஜாரிட்டி
மக்கள் தொகையில் அங்கு பெரும்பான்மை பட்டிதார் இனப்பிரிவை சேர்ந்தவர்கள்தான். இவர்கள் குழுவாக செயல்படுவதுதான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக மாற காரணம். அதாவது இந்த ஜாதிக்குள் பல பிரிவுகள் உள்ளன. பல அமைப்புகள் உள்ளன. ஆனாலும் இந்த ஜாதியில் ஒன்றாக பெரிய தலைவர்கள் கூடி முடிவு எடுத்து, ஒரு கட்சிக்கு, ஒரு தலைவருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால், அந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். அது பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி. பட்டிதார் இன மக்களின் ஆதரவை பெற்றுவிட்டால் எளிதாக வெற்றிபெற முடியும். பட்டிதார் இன மக்களின் முதல் சாய்சாக 27 வருடங்களுக்கு முன்பு இருந்தது என்னவோ காங்கிரஸ்தான்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சிக்குத்தான் இந்த ஜாதி தீவிர ஆதரவை கொடுத்து வந்தது. இதனால் காங்கிரஸ் 150 இடங்களை கூட வெல்லும் அளவிற்கு 30 வருடங்ககுக்கு முன் குஜராத்தில் வலிமையாக இருந்தது. 30 வருடங்களுக்கு முன் அங்கு காங்கிரஸ் முதல்வர் மாதவ் சிங் எடுத்த ஒரு முடிவுதான் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை மாற்றியது. அதன்பின் தேசிய அரசியலின் தலைவிதியை மாற்றவும் இதுவே காரணமாக அமைந்தது. அங்கு காங்கிரஸ் முதல்வர் மாதவ் சிங் பட்டிதார் இன மக்களை புறக்கணித்துவிட்டு சாத்திரிய - அரிஜன - முஸ்லீம் - ஆதிவாசி உருவாக்கினார். பட்டிதார் இல்லாமல் வென்று காட்ட வேண்டும் என்று நினைத்து அவர் சொதப்பினார். இதனால் காங்கிரஸ் அங்கு பட்டேல் இன மக்கள் ஆதரவை இழந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு அங்கு பாஜக வளர்ந்து, பட்டிதார் உதவியுடன் தொடர்ந்து ஆட்சியிலும் இருந்து வருகிறது.
கேசுபாய் பட்டேல்
1995ல் கேசுபாய் பட்டேல் இதை பயன்படுத்திக்கொண்டு பாஜக சார்பாக முதல்வர் ஆனார். அப்போது அங்கு தொடங்கிய பாஜக ராஜ்ஜியம் இதுவரை முடியவில்லை. பாஜகவும் அங்கு இதுவரை பட்டிதார் இன பிரிவை எதிர்த்ததே இல்லை. அங்கு பாஜக சார்பாக மாற்றப்பட்ட 9 முதல்வர்களின் 5 பேர் பட்டிதார் இன பிரிவை சேர்ந்தவர்கள். அங்கு கடைசியாக முதல்வராக இருந்த விஜய் ரூபாணி மாற்றப்பட்டு புபேந்திரபாய் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார். தேர்தலுக்கு முன் இவர் முதல்வராக மாற்றப்பட்டதற்கு காரணம் அவர் பட்டிதார் இனத்தை சேர்ந்தவர் என்பதால்தான். அந்த அளவிற்கு பாஜக அங்கு இன மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
2017
கடந்த 2017 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பட்டிதார் இன மக்களுக்காக ஹர்திக் பட்டேல் போராட்டம் செய்து இடஒதுக்கீடு கோரிக்கை வைத்தார். இதனால் அவர் பட்டிதார் இன பிரிவின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். 2017 சட்டசபை தேர்தலில் ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் பக்கம் இருந்தார். ஹர்திக் பட்டேல் என்ற பட்டிதார் தலைவர் உதவியுடன் காங்கிரஸ் குஜராத்தில் கடந்த தேர்தலில் எழுச்சி பெற்றது. அங்கு இதனால் காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. கடந்த 2017 சட்டபை தேர்தலில் பாஜக 99 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜகவை கிட்டத்தட்ட தோல்விக்கு அருகே கொண்டு வந்தது காங்கிரஸ். முதல்முறை பாஜக இரட்டை இலக்கத்திற்கு சுருங்கி போக ஹர்திக் பட்டேல் காங்கிரசை ஆதரித்ததுதான் காரணம், அங்கு பாஜக ஆதரவு குறைய காரணம், அவர்கள் பட்டேல் இனப்பிரிவினர் இடையே ஆதரவை இழந்ததால்தான்.
பதிலடி
ஆனால் இதற்கு பாஜக உடனடியாக பதிலடி கொடுத்தது. ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் பக்கம் வந்ததால் பாஜக அங்கு ஆதரவை வெகுவாக இழந்தது. இந்த நிலையில்தான் அதே ஹர்திக் பட்டேலை சரியாக குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பாஜக பக்கம் வரவழைத்து அமித் ஷா அதிரடி காட்டினார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஹர்திக் பட்டேல் பாஜகவில் இணைந்தார். இதனால் பாஜக இழந்த பட்டிதார் வாக்குகளை மீண்டும் பெற்றது. சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்ததிலும் சரி, விஜய் ரூபாணியை நீக்கிவிட்டு பட்டித்தார் இன பிரிவை சேர்ந்த புபேந்திரபாய் பட்டேலை முதல்வராக நியமித்தத்திலும் சரி.. பாஜக ஸ்மார்ட்டாகவே செயல்பட்டு வந்தது. இந்த தேர்தலுக்காக தீவிரமாக பாஜக தயாராகி வந்தது.
தட்டி தூக்கிய பாஜக
முத்தாய்ப்பாக தற்போது ஹர்திக் பட்டேலையும் தட்டி தூக்கியது. குஜராத்தான் தங்கள் கோட்டை என்பதை மீண்டும் பாஜக நிரூபித்து உள்ளது. ஹர்திக் பட்டேலை கட்சியின் செயல் தலைவராக நியமித்தாலும்.. அவரின் ஆதரவாளர்கள் யாருக்கும் பதவி தராமல் காங்கிரஸ் புறக்கணித்தது. அவரின் பேச்சுக்கு கட்சியில் மதிப்பே இல்லாமல் இருந்தது என்று காங்கிரஸ் செய்த சொதப்பல்கள் காரணமாக, ஹர்திக் பட்டேலுக்கு முழு மரியாதையை கொடுத்து பாஜக அவரை தட்டி தூக்கிவிட்டது. ஹர்திக் பட்டேலுக்கு பதிலடியாக குஜராத்தில் பட்டிதார் இனப்பிரிவான Leuva Patel பிரிவை சேர்ந்த நரேஷ் பட்டேல் என்ற இளம் தலைவரை காங்கிரஸ் இழுக்க முயன்று தோல்வி அடைந்தது. விளைவு இந்த தேர்தலில் பட்டிதார் வாக்குகளை காங்கிரஸ் வெகுவாக இழந்து.. தேர்தலிலும் படுதோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.