ஸ்டாலின் ரூட்டை பிடித்த பிரியங்கா.. இமாச்சல் வெற்றிக்கு காரணமான அந்த அஸ்திரம்! தேசிய அளவில் ட்விஸ்ட்
சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்து உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அங்கு காங்கிரஸ் 21 இடங்களை மட்டுமே வென்று இருந்த நிலையில் இந்த முறை 40 இடங்களை பெற்று வெற்றிபெறும் நிலையில் உள்ளது. மாறாக பாஜக 25 இடங்களுக்கு சுருங்கி உள்ளது. ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
பொதுவாக உட்கட்சி மோதல் அதிகம் இருக்கும் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைக்க முக்கிய காரணமாக இருந்தவர் பிரியங்கா. பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மேற்கொண்ட சில அதிரடி நடவடிக்கைகள்தான் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற காரணமாக இருந்தது.
இமாச்சல பிரதேசத்தில் லோக்சபா வாக்குகள் அடிப்படையில் 69 சதவிகித வாக்குகளை பாஜக வைத்து உள்ளது. இந்தியாவிலேயே பாஜகவின் லோக்சபா வாக்கு சதவிகிதம் இமாச்சல பிரதேசத்தில்தான் அதிகம். அப்படிப்பட்ட இமாச்சல பிரதேசத்தில்தான் பாஜகவை திக்கி திணற வைத்து தண்ணி குடிக்க வைத்து இருக்கிறார் பிரியங்கா காந்தி.
அப்படி என்றால் இந்த வெற்றி அவ்வளவு சாதாரண வெற்றி கிடையாது! பிரியங்காவின் இந்த வெற்றிக்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.
காரணம் 1
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற காரணம் உள்ளூர் தலைவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்ததுதான். தங்களுக்குள் இருக்கும் வேற்றுமையை உதறிவிட்டு அவர்கள் ஒற்றுமையாக வேலை பார்த்ததுதான் இதற்கு முக்கிய காரணம். இந்த ஒற்றுமையை சாத்தியப்படுத்தியது பிரியங்கா காந்தி. அங்கு அவர் தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கிய பின்புதான் உள்ளூர் தலைவர்கள் மோதலை மறந்துவிட்டு ஒன்றாக தேர்தல் பணிகளை செய்ய தொடங்கினர். வினோத் வர்மா, ராஜீவ் சுக்லா, பூபேஷ் பாகேல், சச்சின் பைலட், என்று ஒரு டீமையே களமிறக்கி தேர்தல் பணிகளை செய்ய வைத்தார். இந்த டீம்தான் பிரியங்கா தலைமையில் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வெற்றியை சாத்தியமாக்கியது.
காரணம் 2
பிரியங்கா காந்தி - சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல் - இமாச்சல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜிவ் சுக்லா ஆகியோர் இணைந்து தேர்தல் பணிகளை இங்கு திட்டமிட்டனர். இந்த முறை வேட்பாளர்களை இவர்கள் மூவரும் சேர்ந்துதான் தேர்வு செய்தனர். மாநில தலைமைக்கு நெருக்கமானவர்களுக்கு சீட் கொடுக்காமல், மாவட்ட அளவில் சர்வே எடுத்து பிரபலமாக இருக்கும் நபர்களை கண்டிபிடித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். இந்த வேட்பாளர் தேர்வில் பிரச்சனை வந்த போதெல்லாம் பிரியங்கா காந்தி உள்ளே புகுந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தோடு அவர் ரோல் முடியாமல்.. அனைத்து விஷயங்களிலும் அதிரடியாக முடிவுகளை எடுத்தார்.
காரணம் 3
பூத் அளவில் பிரியங்கா டீம் புதிய ஆட்களை நியமனம் செய்தது. இதற்காக ஒரு வார் ரூமையே பாகல் நடத்தி வந்தார். அவருக்கு கீழ்தான் வினோத் வர்மா செயல்பட்டு பூத் பணிகளை கவனித்தார். புதிய பூத் நிர்வாகிகளை நியமனம் செய்து, இந்த ஊரில் இவரை பிடித்தால் வாக்கு கிடைக்கும் என்பதை எல்லாம் கணித்து பணிகளை செய்து உள்ளனர். அடிமட்ட தொண்டர்களுக்கு போன் செய்ய வேண்டும் என்றால் கூட கவலைப்படாமல் புபேஷ் பாகல் போன் செய்து பேசி இருக்கிறார். அந்த அளவிற்கு பிரியங்கா டீம் இறங்கி வேலை பார்த்து உள்ளது.
காரணம் 4
தேர்தலில் வெற்றிபெற நான்காவது காரணம் பிரியங்கா எடுத்த ஸ்டாலினின் அஸ்திரம். இங்கு திமுகவின் மிக முக்கியமான வாக்குறுதியாக பார்க்கப்பட்டது குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் திட்டம். தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்கிறார்கள். பிரியங்கா இதே திட்டத்தை Har Ghar Laxmi Campaign என்ற பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தெரிவித்தார். இந்த வாக்குறுதி பெண்களின் வாக்குகளை கவர மிக முக்கியமான காரணமாக அமைந்தது.
காரணம் 5
இதற்காக பிரியங்கா பயன்படுத்திய டீம் மிக முக்கிய காரணம் ஆகும். Matrix Ground Strategies என்ற குழுவை இதற்காக பிரியங்கா களமிறக்கி இருந்தார். பிரஷாந்த் கிஷோரின் ஐபேக்கில் இருந் நிர்வாகிகளை அடக்கிய குழு ஆகும் இது. இந்த குழுதான் Har Ghar Laxmi Campaign திட்டத்தை தமிழ்நாட்டை பார்த்து இமாச்சல பிரதேசத்தில் அறிவிக்கலாம் என்று கூறியது. இவர்கள் எடுத்த சர்வே அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதோடு இல்லாமல் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை இவர்கள் கண்டுபிடித்து சொல்ல.. பிரியங்கா காந்தி ஈகோ பார்க்காமல் இவர்களிடம் நேரில் பேசி சமாதானம் செய்து இருக்கிறார். போனால் போகட்டும் என்று இல்லாமல் எல்லா நிர்வாகிகளையும் மரியாதையோடு நடத்தியது பிரியங்காவிற்கு தேர்தலில் பெரிய அளவில் உதவி இருக்கிறது.
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது எப்படி.. தலைமை எப்படி செயல்பட வேண்டும் என்ற சூட்சமத்தை பிரியங்கா காந்தி கண்டுபிடித்துள்ளது தேசிய அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது! இது வெறும் ஆரம்பம்தான் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வரும் நிலையில் 2024 தேர்தல் இப்போதே சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.