மோடியின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் கொந்தளித்து கிடக்கும் குஜராத் வாக்காளர்கள்.. டைம்ஸ் நவ் சர்வே
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாக குஜராத் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி விவகாரத்தால் குஜராத் மக்கள் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாக டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த 2 ஆண்டில் மிக்ப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்பிற்கு ஆளாக்கியது.
ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு வங்கி, ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் மிகவும் அவதிக்கு ஆளாகினர்.
ஏடிஎம்களில் தவமாய் தவமிருந்து..
வங்கியில் தங்கள் கணக்கில் இருந்தே மக்கள் பணத்தை எடுப்பதற்கு கட்டுப்பாடுகளுக்கு மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஏனெனில் அந்த அளவிற்கு ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
கடுமையான பாதிப்பை தந்த ஜிஎஸ்டி
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் நாடு முழுவதும் ஒரே வரி என்ற ஜிஎஸ்டி முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருட்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தியது. பொருளாதார மந்த நிலைக்கு இந்த இரணடு நடவடிக்கைகளும் முக்கிய காரணமாகின. பாஜகவின் இந்த மிகப்பெரிய அடுத்தடுத்த பொருளாதார நடவடிக்கைகளால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
டைம்ஸ் நவ் சர்வேயில் எக்ஸ்போஸ்
இந்நிலையில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள குஜராத் மக்களிடைய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று டைம்ஸ் நவ் விஎம்ஆர் கருத்துக்கணிப்பில் மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு 40 சதவீதம் மக்கள் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வாழ்க்கை நிலையில் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
மக்கள் சொல்வது என்ன?
28 சதவீதம் மக்கள் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பிற்கு பிறகு வாழ்க்கை மேம்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். 18 சதவீதம் மக்கள் இந்த நடவடிக்கைகளால் எந்த மாற்றமும் இல்லை என்றும் 14 சதவீதம் மக்கள் ஏதோ பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.