நீட் விஷயத்தில் தமிழகத்துக்கு விலக்கு தரவே முடியாது- கைவிரித்த மத்திய அரசு!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
டெல்லி : நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ மாணவர் சேர்கைக்கான விண்ணப்ப விநியோகம் குறித்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருவதில் மத்திய அரசின் பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது.
உச்சநீதிமன்றத்தின் விதிமுறையின்படியே இந்தத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாகச் செயல்படவோ, மாற்றுக் கருத்தோ தெரிவிக்கப்போவதில்லை.
நீட் தேர்வைப் பொறுத்தவரை, மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தமிழக அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது" என அவர் தெரிவித்தார்.