பிரதமர் மோடி, ட்ரம்ப் மகள் வருகைக்காக பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தும் ஹைதராபாத் மாநகராட்சி
ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் சர்வதேச நிகழ்வுகளுக்காக பிச்சைக்காரர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்
ஹைதராபாத் :பிரதமர் மோடி மற்றும் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பின் வருகையையொட்டி ஹைதாராபாத் நகரில் உள்ள பிச்சைக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக ஹைதராபாத்தில் நகரில் இருந்து பிச்சைக்காரர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அதுபோல நகரில் பிச்சை எடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 200 பிச்சைக்காரர்கள் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்கும் முகாம்களில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சிலர் சிறைச்சாலைகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் சாலைகளில், பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்களைப் பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இந்தப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்தியா வருகிறார் ட்ரம்ப் மகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப், தனது தந்தைக்கு முதன்மை ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். நவம்பர் மாத இறுதியில் ஹைதாராபாத்தில் நடக்க இருக்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவதற்காக ஹைதராபாத் வர இருக்கிறார் இவான்கா. இதே விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தர இருக்கிறார்.

உலகப் பிரதிநிதிகள் வருகை
அதுபோல டிசம்பர் மாதத்தில் உலக தெலுங்கு மாநாடும் ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. இதனால் நகரைத் தூய்மைப்படுத்தும் பணி துரித வேகத்தில் நடந்துவருகிறது. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்ளும் இந்த சர்வதேச நிகழ்வுகளின் போது பிச்சைக்காரர்களால் எந்த வித முகச்சுளிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே பிச்சைக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆதரவற்றோருக்கு நல்வாழ்வு
இந்திய சட்டப்படி பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம். இதற்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க சட்டத்தில் வழி உண்டு. ஆனால், இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. விரைவில் ஹைதராபாத் நகரில் இருந்து பிச்சைக்காரர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். அவர்கள் வேன் மூலம் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள். ஆதரவற்றோருக்கு நல்வாழ்வுக்கு வழி ஏற்படுத்தித் தரப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பிச்சை எடுத்தால் சிறைத்தண்டனை
முகாம்களுக்கு கொண்டு செல்லப்படும் பிச்சைக்காரர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு, உடை வழங்கப்பட்டு அவர்களின் கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்படும். மீண்டும் அவர்கள் ரோடுகளில் பிச்சை எடுப்பது தெரியவந்தால் அவர்கள் சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பிச்சைக்காரர்கள் தடுப்பு நடவடிக்கை
கடந்த சில மாதங்களாக ஹைதராபாத் நகரில் பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து வயதுக்கும் கீழான குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை சாலைகளில் சுற்றித்திரிவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தடுக்கவே இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் கொடுத்தால் பரிசு
இவர்களைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காகவே தனியே போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் ,சுகாதாரத்துறைப் பணியாளர்கள் அடங்கிய 24/7 கட்டுப்பாட்டு மையமும் திறக்கப்பட்டு உள்ளது என்று காவல்துறை உயர் அதிகாரி வி.கே.சிங் தெரிவித்து உள்ளார்.

என்ன நடவடிக்கை எடுத்தது அரசு ?
இதுபோன்ற நிகழ்வுகளின் போது பிச்சைக்காரர்கள் அப்புறப்படுத்தப்படுவது இது முதன்முறை அல்ல; ஏற்கனவே 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் டெல்லியில் நடந்த போது, இந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் ஆனால் அவர்களின் வாழ்வுக்கு இந்த அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications