மெட்ரோ ரயிலா, டவுன் பஸ்ஸா?... ஹைதராபாத்தில் முதல்நாளிலேயே லட்சம் பேர் பயணம்!
ஹைதராபாத்தில் முதல் நாளிலேயே ஒரு லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
Recommended Video
ஹைதராபாத் : ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்ட முதல்நாளிலேயே சுமார் 1 லட்சம் பேர் பயணித்துள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் முதல்நாளிலேயே 10 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகளையும், 45 ஆயிரம் டோக்கன்களையும் பிற்பகல் வரையிலுமே விநியோகித்துள்ளது.
நேற்று முன் தினம் ஹைதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். மியாப்பூரில் இருந்து நாகோல் வரைலியலான சுமார் 30 கி.மீ தூரத்தில் 24 ரயில் நிலையங்களைக் கவரும் வகையில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவையின் வர்த்தக ரீதியிலான ரயில் சேவை நேற்று தொடங்கியது. மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 10ம் அதிபகட்ச கட்டணமாக ரூ. 60ம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
உற்சாக பயணம்
இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான மக்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி பயணித்தனர். பல மக்களும் ஒரு மகிழ்ச்சிப் பயணமாகவே மெட்ரோ ரயிலில் பயணித்தனர், ஒரு சிலர் மட்டுமே தங்களது பணியிடங்களுக்கு செல்வதற்காக பயணம் மேற்கொண்டனர்.
10 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள்
முதல் நாளிலேயே சுமார் 1 லட்சம் பேர் மெட்ரோ ரயில் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் என்.வி.எஸ். ரெட்டி தெரிவித்துள்ளார். எல் அண்ட் டி ஹைதராபாத் மெட்ரோ ரயில் 10 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகளை விற்பனை செய்துள்ளது, மேலும் 45 ஆயிரம் டோக்கன்கள் பிற்பகல் வரையிலுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சிரமங்கள் களையப்படும்
பயணிகளுக்கு சில இடர்பாடுகள் இருப்பதாகவும், இந்த சிரமங்கள் சரி செய்யப்பட்டு விரைவில் மக்கள் குறித்த நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வருகை பதிவு
பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு உள்ளே நுழையும் இடம் மற்றும் வெளியேறும் இடத்தில் ஆட்டோமேடிக் சிஸ்டம் முறையில் பதிவு செய்யப்படுகிறது. பல பயணிகள் மெட்ரோ ரயில் நுழைவு வாயில், பிளாட்பார்ம், ரயிலில் பயணிக்கும் போது என செல்ஃபிகளாக எடுத்துத் தள்ளினர்.