மத்திய அரசின் ஓர் அங்கமாக இருந்தால்.. 7 நாட்களிலே வருமான வரியை ஒழிப்பேன் - சுப்பிரமணியன் சுவாமி
டெல்லி: நான் மத்திய அரசின் ஓர் அங்கமாக இருந்தால் 7 நாட்களில் வருமான வரியை ஒழிப்பேன் என ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இந்திய வர்த்தகர்கள் கழகத்தில் அண்மையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "நான் அரசின் ஓர் அங்கமாக இருந்தால் 7 நாட்களில் வருமான வரியை ஒழிப்பேன். ஆனால் அரசின் அங்கமாக இல்லை என்பதால், அடுத்த 3 ஆண்டுகளில் வருமான வரியை முற்றிலும் ஒழிப்பேன்" எனக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "பணக்காரர்களுக்கு வருமான வரியை எப்படி ஏமாற்றுவது என்பது தெரியும், ஏழைகள் வரி செலுத்தும் இடத்தில் இல்லை. எனவே, நடுத்தர வர்க்கத்தினர் இளம் தொழில் நிபுணர்கள், மாதாந்திர வருவாய் ஈட்டுபவர்கள்தான் வருமான வரி செலுத்துகின்றனர். அதாவது, வருமான வரி மூலம் திரட்டப்படும் ரூ.2 லட்சம் கோடி வருவாயை மற்ற வருவாய் மூலம் ஈடுகட்ட முடியும்.
தற்போதைய வளர்ச்சி விகிதம் வறுமை மற்றும் வரியின்மையை ஒழிக்கப் போதுமானதல்ல, நாட்டின் வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்க வேண்டும். மற்ற நாடுகளை ஒப்பிடும் போது நமது நாடு நல்ல வளர்ச்சியையே பெற்று வருகிறது. இருப்பினும் இந்த வளர்ச்சி போதுமானதல்ல.
அடுத்த 10 ஆண்டுகளில் 10% வளர்ச்சி விகிதம் என்ற அடிப்படையில் வளர்ச்சியடைந்தால்தான் வறுமை, வேலையின்மை ஆகியவற்றைக் ஒழிக்க முடியும். சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளுக்கு உள் நாட்டு வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் தேவைப்படுகிறது. எனவே குறைந்த வட்டி விகித பொருளாதார சூழல்தான் நமக்குத் தேவை. இது ரகுராம் ராஜனை சிகாகோவுக்கு திருப்பி அனுப்பினால் மட்டுமே முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications