மோடியை கட்டிப்பிடிக்க தோன்றுவது ஏன்? ராகுல் காந்தியின் உருக்கமான விளக்கம்
புவனேஷ்வர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியலில் எதிர்த்து நிற்பேனே தவிர, அவரை வெறுக்கமாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வரில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என் கொள்கைகள், கோட்பாடுகளில் நரேந்திர மோடிக்கு உடன்பாடு இருக்காது. அதைப்போலத்தான், அவருடைய கொள்கைகளில், எனக்கு உடன்பாடு இல்லை.
அரசியலில், நான் மோடியை முழு மூச்சுடன் எதிர்ப்பேன். அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதி காட்டுகிறேன். அதேநேரம், எக்காரணம் கொண்டும் மோடியை நான் வெறுத்துவிட மாட்டேன். தவறாகவே இருந்தாலும், தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த நரேந்திர மோடிக்கும் முழு உரிமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவிடமிருந்து எனக்கு எதிராக வந்த தூற்றுதல்கள்தான் என்னை ஒரு நல்ல அரசியல்வாதியாக உருவாக்கியது. எனவேதான், பிரதமர் மோடி என்னை தூற்றினால் அவரை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அனைத்து மட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் கொள்கை ஊடுறுவல் உள்ளது. நாட்டில் இருக்கும் அனைத்து அரசு அமைப்புகளிலும் அந்தக் கொள்கை உள்ளே நுழைய முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.