ரூ.50 கோடி பறிமுதல் எதிரொலி! பார்த்தா சட்டர்ஜியின் அமைச்சர் பதவி பறிப்பு. . மம்தா அதிரடி
கொல்கத்தா: நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை பதவியில் இருந்து நீக்கி மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான அரசு இயங்கி கொண்டு இருக்கிறது. இவரது மந்திரிசபையில், 69 வயதான பார்த்தா சாட்டர்ஜி வணிகம் மற்றும் தொழில்துறையின் மந்திரியாக இருக்கிறார்.
இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மட்டுமல்ல, மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவர். மம்தாவின் முந்தைய ஆட்சியின்போது 2014-2021-ம் கால கட்டத்தில் கல்வி மந்திரி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறை ரெய்டு
இந்த நிலையில், அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது நெருங்கியவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில், குறிப்பாக மாநிலத்தின் தற்போதைய கல்வி அமைச்சரான பரேஷ் சி மற்றும் நடிகை அர்பிதா முகர்ஜி உள்ளிட்ட நெருங்கிய நபர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த திடீர் ரெய்டில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருங்கிய கூட்டாளியும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி என்பவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அமைச்சர் கைது
அவரது வீட்டில் இருந்து மட்டும் 500 ரூபாய் நோட்டுகள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என கோடிக்கணக்கான பணம் இந்த ரெய்டில் சிக்கியது. மொத்தம் ர்பிதா முகர்ஜியின் வீட்டில் மட்டும் சுமார் ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டநிலையில், நேற்றும் ரூ.29 கோடி என மொத்தம் 50 கோடி ரூபாய் ரொக்காமாக கைப்பற்றபட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பர்த்தா சட்டர்ஜி மற்றும் நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தர்மசங்கடத்தில் மம்தா
மத்தியில் ஆளும் மோடி அரசை கடுமையாக எதிர்த்து வரும் மம்தா பானர்ஜிக்கு, அவரது மந்திரிக்கு தொடர்புடைய இடங்களில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியிருப்பது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. பார்த்த சட்டர்ஜியின் செயல் தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அவர் தவறு செய்தால் தண்டனை அனுபவிக்கட்டும் என்று மம்தா பானர்ஜி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரை பதவியில் இருந்து நீக்கவில்லை. இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் குணால் கோஷ், 'பார்த்தா சட்டர்ஜி அமைச்சர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்படுவார்' என பதிவிட்டு இருந்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த ட்விட் பதிவை நீக்கிவிட்டார். பின்னர் இதற்கு விளக்கம் அளித்து மற்றொரு ட்விட்டில், ''கட்சி நிர்வாகிகள் பார்த்தா சட்டர்ஜி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, எனது தனிப்பட்ட ட்விட்டை நான் அழித்துவிட்டேன்" எனப்பதிவிட்டு இருந்தார்.

பதவியில் இருந்து நீக்கம்
இந்த நிலையில், பார்த்தை சட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி தூக்கியுள்ளார். பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் இன்று அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தொடர்ந்து இது பற்றி கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, ''இந்த விவகாரத்திற்கு பின்னால் பல திட்டங்கள் இருக்கக்கூடும். ஆனால், அதற்கு நான் விரிவாக செல்லப் போவது இல்லை. திரிணாமூல் காங்கிரஸ் வலுவான கட்சி. மிகவும் கண்டிப்பான கட்சியும் கூட" என்றார். மேலும், பார்த்த சட்டர்ஜி வசம் இருந்த வணிகம் மற்றும் தொழில்துறையை தற்போதைக்கு தன்வசமே வைத்துக்கொள்வதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications