மோடி பிரதமராவார் என்பதை அறிவேன்: மனைவி ஜஷோடபென் பேட்டி!!
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒருநாள் பிரதமராவார் என்பது என் நம்பிக்கை என அவரது மனைவி ஜஷோடபென் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, தமக்கு திருமணம் ஆகிவிட்டது.. தனது மனைவி பெயர் ஜஷோடபென் என்று முதல் முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட போதெல்லாம் வேட்புமனுவில் திருமணம் குறித்த தகவலை தெரிவிக்காமலேயே வந்தார் மோடி. ஆனால் அண்மைக்காலமாக அவருக்கு திருமணமாகிவிட்டது.. அவரது மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை ஜஷோடபென் என்று ஊடகங்கள் எழுதி வந்ததுடன் அவரது பேட்டியையும் வெளியிட்டன.

அத்துடன் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வேட்புமனுவில் அனைத்து விவரங்களும் நிரப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடுபிடிகாட்டியது. இதனாலேயே மோடி இப்போது தமக்கு திருமணமாகிவிட்டது என்ற உண்மையை ஒப்புக் கொண்டார்.
ஆனால் மோடி தமது மனைவியுடன் இப்போது இல்லை. அவர் தனியாக வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ஆசிரியையான மோடியின் மனைவி ஜஷோடபென் சில மாதங்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் மோடி..
எனக்கு 17 வயது இருக்கும் போது திருமணம் செய்து கொண்டோம். அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டேன். ஆனால் மோடிதான் என்னை படிக்கத் தூண்டினார்.
எனக்கு மோடியுடன் எந்த தொடர்பும் இல்லை.. எந்த சண்டையும் இல்லை.. அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தார். நான் அப்போது மாமனார் வீட்டில் இருந்தேன். ஒருகட்டத்தில் அவர் அங்குகூட வருவதும் இல்லை.
அதன் பின்னர் நானும் அங்கே செல்வதை தவிர்த்துவிட்டேன்.. அவரை விட்டு விலகுவது என்பது என்னுடைய முடிவுதானே தவிர.. எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை..
அவர் பிரதமராவார்..
அவரைப் பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளைப் படிப்பேன். தொலைக்காட்சிகளில் அவரைப் பற்றிய செய்திகளை ஆர்வமுடன் கேட்பேன்.
நான் அவரை சந்திக்கப் போவதும் இல்லை.. அவர் என்னை அழைப்பார் என்றும் நினைக்கவும் இல்லை.. அவரை துன்பப்படுத்த நான் விரும்பவில்லை.. அவர் அவருடைய பணியில் முன்னேற வேண்டும். ஒருநாள் அவர் நாட்டின் பிரதமராக அவர் வரவேண்டும்.
நான் அவருடைய மனைவி இல்லையெனில் எப்படி என்னிடம் ஊடகங்கள் பேசுவார்கள்? அவரைவிட்டு வந்த பிறகு நான் வேறு திருமணம் செய்யப் போவதில்லை என முடிவு செய்துவிட்டேன். என்னுடைய மாமனார் குடும்பத்தினர் நன்றாகத்தான் பார்த்துக் கொண்டனர்.
என்னுடைய கல்வியைத் தொடர என் சகோதரர்கள் உதவி செய்தார்கள். அதன் பின்னர் 1978ல் ஆசிரியர் பயிற்சியையும் முடித்தேன். இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன்.
ஓய்வு பெற்ற பின்னர் இப்போது ஆன்மீகத்தில்தான் அதிக நாட்டம் இருக்கிறது. என்னுடைய அண்ணன் அசோக் மோதியுடன்தான் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இன்னொரு அண்ணன் பிரமன்வதாவில் இருக்கிறார். எனது இரு சகோதரர்களும்தான் ஆதரவாக இருக்கின்றனர்.
இவ்வாறு மோடி மனைவி ஜஷோடபென் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications