உண்மையை வெளியிடுவது என் பணி.. ஆட்சியாளர்களை கேள்வி கேட்க வேண்டும்: பத்திரிகையாளர் ரோகிணி சிங்
ஆட்சியாளர்களை கேள்வி கேட்பதுதான் தம்முடைய பணி என மூத்த பத்திரிகையாளர் ரோகிணி சிங் கூறியுள்ளார்.
டெல்லி: உன்மையை வெளியிடுவதும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்பதுதான் தமது பணி என மூத்த பத்திரிகையாளர் ரோகிணி சிங் குறிப்பிட்டுள்ளார்.
அமித்ஷாவின் மகன் குறித்து தி வயர் இணையதளத்தில் கட்டுரை எழுதியதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரோகிணி சிங். இந்நிலையில் தமது ஃபேஸ்புக்கில் ரோகிணி சிங் இன்று பதிவிட்டுள்ளதாவது:
உண்மையை வெளியிடுவேன்
பத்திரிகையாளர் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதை எழுதுவதற்காக நான் இங்கு வரவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வருவதுதான் என்னுடைய பணி.
அன்று வதேரா-டிஎல்ப்
பத்திரிகையாளரின் பணி ஆட்சி பீடத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்பது மட்டுமே. 2011-ம் ஆண்டு ராபர்ட் வதேராவுக்கும் டி.எல்.ஃப்-க்கும் இடையே நடந்த உடன்பாடுகள் குறித்து செய்தி வெளியிட்டபோது எந்தவொரு பின்னடைவையும் நான் சந்திக்கவில்லை.
நினைவுக்கு வரும் வரிகள்
இப்போது நான் சந்திக்கின்ற பிரச்னைகளைவிட அப்போது எந்தப் பின்னடைவும் எனக்கு ஏற்படவில்லை. தற்போது என்னுடைய போன் அழைப்புகளை எல்லாம் ஒரு மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவர் பதிவு செய்து வருகிறார். அதிகாரத்தை வைத்து மிரட்டவும் துன்புறுத்தவும்தான் முடியும். ' மற்றவர்களால் அடக்கப்படுவது மட்டுமே செய்தி, மற்றவை எல்லாம் வெறும் விளம்பரங்கள்தான்' என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
நான் ஒரு தைரியசாலி
என்னைச் சுற்றிலும் வெளியிடப்படும் செய்திகள்போல் நான் எழுதுவதைக் காட்டிலும் பத்திரிகையாளர் வேலையிலிருந்தே நான் விலகிவிடலாம். என்னிடம் இல்லாத பல பண்புகளை இருப்பது போல சித்தரித்து வருகிறார்கள். நான் ஒரு தைரியசாலி என்பதற்காக எல்லாம் இப்படிப்பட்ட செய்திகளை எழுதுவதில்லை. இவ்வாறு ரோகிணி சிங் பதிவிட்டுள்ளார்.