பாச தங்கையை இழந்து விட்டேனே... கண்ணீர் விடும் ஜெயலலிதாவின் மைசூரு அண்ணன்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு மைசூருவில் வசிக்கும் அவரது அண்ணன் வாசுதேவன் என்பவர் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்.
மைசூரு: ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் என்பதுதான் பலருக்கும் தெரியும் ஆனால் யார் இந்த வாசுதேவன் என்பவர்களுக்கு ஒரு சின்ன ப்ளாஷ் பேக்.
கர்நாடகாவின் மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் உள்ள ரங்கராஜபுரா கிராமத்தில் வசிக்கிறார் ஜெயலலிதாவின் சகோதரர் வாசுதேவன்,
ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம், 1935ல், ஜெயா என்பவரை முதலில் திருமணம் செய்தார். பின், 1937ல், சந்தியாவை மணந்தார். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஜெயா, ஜெயராமின் சொத்துகளில், எனக்கும் பங்கு வேண்டும்; ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்' என, வக்கீல் வேணுகோபால் என்பவர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
மன்னர் கொடுத்த பரிசு பொருட்கள்
வாசுதேவன், மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவிலுள்ள ஸ்ரீரங்கபுராவில் வசித்து வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயலலிதா சிறையில் இருந்த போது, பேட்டி அளித்த வாசுதேவன், மைசூரில் இருந்து எனது தந்தை சென்றபோது, மன்னர் நால்வாடி கிருஷ்ணராஜ உடையார் கொடுத்த பரிசு பொருட்களையும் எடுத்து சென்றார். கடந்த 1951 நவம்பர் 5ம் தேதி எனது தந்தை ஜெயராமன் இறந்து விட்டார். அதைத் தொடர்ந்து குடும்ப சொத்தை பிரித்து கொடுக்கும்படி நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். பின் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள முடிவு செய்தோம். ஆனால், எந்த பலனுமில்லை. நான் விட்டு விட்டேன். இடையில் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை என்று கூறியிருந்தார்.
அண்ணனின் கண்ணீர்
ஜெயலலிதா மரணமடைந்தது பற்றி கருத்து கூறியுள்ள வாசுதேவன், என் தங்கை ஜெயலலிதா பற்றி பேச வார்த்தைகள் இல்லை. எனது தந்தையின் இரண்டாவது மனைவியின் மகளாக இருந்தாலும் நான் அவரை சொந்த தங்கையாகவே நினைத்தேன். எப்பொழுதும் அவர் நலத்திற்காகவே வேண்டினேன் என்று கூறியுள்ளார்.
சாதித்த தங்கை
மனைவி மற்றும் மகனின் மரணத்தை பார்த்து வேதனையில் வாழ்ந்து வருகிறேன். தற்போது தங்கையும் இறந்துவிட்டார் என்ற செய்தி வருத்தத்தை தந்துள்ளது. தனது சொந்த திறமையால் திரைப்படம் மற்றும் அரசியல் துறையில் ஜெயலலிதா சாதித்துள்ளார்.
வலியை தாங்கும் சக்தி
தமிழ்நாட்டு மக்களுக்காக தன்னை தியாகம் செய்தவர். அவரது பணிகள் என்றும் தமிழ் மக்களின் உள்ளத்தில் நீங்காது நிற்கும். அவரது மறைவு தமிழ்நாட்டுக்கு மட்டும் சோகத்தை அளிக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது ரசிகர்களுக்கும் சோகத்தை தந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த வலியை தாங்கிக் கொள்ளும் சக்தியை சாமுண்டீஸ்வரி தேவி வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மைசூரு சொந்தம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் தங்கை என்று சைலாஜா என்பவர் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தான் சந்தியாவின் மகள்தான் என்றும் டிஎன்ஏ சோதனைக்கு கூட தயார் என்றும் பரபரப்பை கிளப்பினார். ஜெயலலிதாவை தனது தங்கை என்று சில ஆண்டுகளாகவே கூறி வரும் வாசுதேவன் தற்போது தங்கையின் மரணத்திற்காக கண்ணீர் சிந்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.