நான் பேச மாத்தேன், பேச மாத்தேன், பேச மாத்தேன்.. பேசவே மாத்தேன்.. பிடிவாதம் பிடித்த சீனிவாசன்!
திருப்பதி: ஐபிஎல் பெட்டிங் விவகாரத்தில், கோர்ட்டின் பிடியில் இருந்து தப்பிய, ஐசிசி சேர்மன் சீனிவாசன், நிருபர்கள் யாருக்கும் பேட்டி கொடுக்க முடியாது என்று கறாராக கூறிவிட்டார்.
6வது ஐபிஎல் போட்டியில் பல்வேறு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிப்பதற்காக முத்கல் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. முத்கல் குழு தனது அறிக்கையை சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. சுமார் 18 மாதங்கள் நடந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், கலிபுல்லா ஆகியோர் கொண்ட பெஞ்ச் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது.
130 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு நகலை நீதிபதிகள் வாசித்தனர். அதில் சீனிவாசன் விவகாரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: சென்னை அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. குருநாத் மெய்யப்பனை காப்பாற்ற முயன்றதாக சீனிவாசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.
ஆனாலும், அவர் பிசிசிஐ தலைவராக இருந்து, ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும் இருந்துள்ளார். இவ்வாறு வர்த்தக நோக்கத்தில் இருக்கும் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் பிசிசிஐயின் எந்த தேர்தலிலும் பங்கேற்க கூடாது. பிசிசிஐ பதவி அல்லது வர்த்தக நடவடிக்கைகள் இரண்டில் ஏதாவது ஒன்றில் மட்டுமே இருக்க வேண்டும். இவ்வாறு அந்த தீர்ப்பு சீனிவாசன் குறித்து குறிப்பிட்டது.
குருநாத் மெய்யப்பனுக்கு, சீனிவாசன் உதவியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருந்தால் சீனிவாசன் தண்டனை பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் தண்டனையில் இருந்து தப்பினார் சீனிவாசன்.
எனவே கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் சீனிவாசன். அப்போது அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்றபடி கருத்து கூறும்படி மைக்கை நீட்டினர். ஆனால் சீனிவாசன் அதில் ஆர்வம் காட்டாமல் மேற்கொண்டு நடக்கத் தொடங்கினார். அவரை சுற்றிலும் வளையம்போல ஆதரவாளர்கள் சூழ்ந்து நின்றபடி அவரை அழைத்துச் சென்றனர்.
அப்போது டைம்ஸ்நவ் நிருபர் இந்த வளையத்திற்குள் புகுந்து சீனிவாசன் அருகே சென்று, மைக்கை பிடித்தபடி கருத்து கேட்க ஆரம்பித்தார். அப்போது ஆதரவாளர்களில் ஒருவர் நிருபரை பிடித்து வெளியே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. "இன்று மாலைவரை நான் கேமரா முன்னாடி நின்றாலும், வாய் திறந்து எந்த பேட்டியும் தரப்போவதில்லை" என்று கூறிவிட்டு சீனிவாசன் கிளம்பிச் சென்றுவிட்டார்.