கோவா டூ கர்நாடகா.. பாஜகவுக்கு 'நோ' மெஜாரிட்டி.. ஆளுநர் 'தயவில்' ஆட்சியமைக்கும் அதிசயம்!
Recommended Video
பெங்களூரு: சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையே கிடைக்காத நிலையிலும் ஆளுநர்களின் தயவில் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது தொடர் கதையாகி வருகிறது. கோவா, மணிப்பூர், மேகாலயாவைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் பெரும்பான்மை இல்லாமலேயே ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது பாஜக. இதை தட்டிகேட்க வேண்டிய ஊடகங்கள் பல மவுனிகளாக கடந்து செல்கின்றன.
மாநிலங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படுவதன் மூலமான ஆதாயங்களை பாஜக தொடர்ந்து அறுவடை செய்து வருகிறது. இப்போது கர்நாடகாவிலும் அதுதான் நடைபெற இருக்கிறது.
கோவாவில் நடந்தது இதுதான்
கடந்த ஆண்டு கோவா சட்டசபை தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக வந்தது. பாஜக 13 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. 40 இடங்களைக் கொண்ட கோவாவில் ஆட்சிக்கு தேவை 22. கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என மார்தட்டுகிறது பாஜக. ஆனால் கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வென்ற காங்கிரஸை அம்மாநில ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. வெறும் 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். அது நியாயம் எனில் இப்போது கர்நாடகாவில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்கள் இருக்கிற போது இந்த கட்சிகளை ஆட்சி அமைக்க அழைப்பதுதானே நியாயம்?
மணிப்பூரில் பாஜக ஆட்சி
அதேபோல் மணிப்பூரில் காங்கிரஸ் 28 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. ஆனால் பாஜக 21 இடங்களில்தான் வென்றது. அங்கும் பாஜகதான் ஆட்சி அமைத்தது. மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைத்தது சரிதான் எனில் கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் ஆட்சிதானே முறையாக இருக்க வேண்டும்?
மேகலாயாவில் பாஜக ஆட்சி
இதைவிட படுகொடுமை.. மேகாலயாவில் காங்கிரஸ் 21 இடங்களில் வென்றது. பாஜக 2 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இருந்தபோதும் இதர கட்சிகளை இணைத்துக் கொண்டு பெரும்பான்மைக்கு தேவையான கணக்கு காட்டி ஆட்சிக் கட்டிலில் ஒய்யாரமாக உட்கார்ந்தது பாஜக. அத்துடன் ஆட்சி அமைக்கும் வித்தை காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு தெரியாது என ஏகடியம் பேசியது பாஜக.
கர்நாடகாவுக்கும் பொருந்தும் அல்லவா?
கோவாவிலும் மணிப்பூரிலும் மேகாலயாவிலும் தனிப்பெரும் கட்சியாக வென்ற காங்கிரஸை ஆளுநர் அழைக்கவில்லைதானே.. ஆளுநருக்கு தேவை ஆட்சி அமைப்பதற்காக எண்கள்தானே.. அப்படியானால் கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு அதிகமாக எம்.எல்.ஏக்கள் இருக்கும் ஜேடிஎஸ்-காங்கிரஸை உடனே ஆட்சி அமைக்க ஆளுநர் சொல்ல வேண்டியதுதானே? இதை கேட்க வேண்டிய பல ஊடகங்கள் கள்ள மவுனமாக இருக்கின்றன. பாஜக நடத்தும் அநீதி அரசியலுக்கு இந்த ஊடகங்கள் ஒத்து ஊதுவதைப் போல மவுனிகளாக இருப்பது ஜனநாயகத்துக்கு கேடானது!