சூறாவளி மழை.. ஸ்தம்பித்து போன மும்பை.. டுவிட்டரில் உதவிக்கரம் நீட்டும் போலீஸ்! #mumbairains
மும்பையை விரட்டும் சூறாவளி மழையில் சிக்கியுள்ளவர்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது மும்பை போலீஸ் டுவிட்டர் பக்கத்திலோ உதவியை கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : மும்பையில் கனமழையில் சிக்கிக் கொண்டவர்கள் 100 என்ற உதவி எண்ணையோ அல்லது டுவிட்டரிலோ தொடர்பு கொண்டால் உடனடியாக உதவத் தயார் என்று போலீசார் கூறியுள்ளனர்.
தென் ராஜஸ்தான் பகுதியில் வீசிவரும் பலத்த காற்றால் மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல ஒடிசாவின் வடக்கு மற்றும் அதையொட்டிய பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக மும்பையில் பேய் மழை பெய்து வருகிறது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு ஏற்றாற் போல மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது, மரங்கள் சாய்ந்து விழுந்து உள்ளன.
தொடர் மழை மும்பை நகரின் பல பகுதிகளை வெள்ளக்காடாக்கியுள்ளது. இந்த மழை மேலும் தீவிரமடையும் என்றும், மாலையில் கடல் அலைகள் பல அடி தூரங்கள் எழும்பும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பதற்றம் வேண்டாம்
இதனால் பணிக்கு வந்துள்ள ஊழியர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப மாகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஊழியர்கள் யாரேனும் இன்னும் அலுவலகத்தில் இருந்தால் பதற்றம் அடையாமல் பொருத்திருந்து வானிலையை பார்த்து பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ளுமாறு மும்பை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
போக்குவரத்து அப்டேட்
மேலும் மழையால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் குறித்தும் டுவிட்டரில் மும்பை போலீசார் உடனுக்குடன் தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். அவசரமான பணிகள் தவிர்த்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் கூறப்பட்டுள்ளது.
வேடிக்கை பார்க்க போகாதீங்க
ராட்சத கடல் அலைகள் எழும்ப வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது, எனவே கடற்கரையை ஒட்டியுள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக கடல்அலையை வேடிக்கை பார்க்கிறேன் என்ற பெயரில் கடற்கரைப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று மும்பை போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
|
உதவிக்கு நாடலாம்
மழைநீரில் எங்காவது மாட்டிக் கொண்டால் உதவிக்கு 100 என்ற அவசர உதவி தொலைபேசி எண்ணிலோ டுவிட்டரிலோ உதவி கேட்கலாம் என்றும் மும்பை போலீஸ் கூறியுள்ளது. மழையால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் குறித்து டுவிட்டரில் உடனுக்குடன் அப்டேட் செய்யும் மும்பை போலீசாரின் முயற்சி கடுமையான வானிலையில் சிக்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.