அடம்பிடிக்கும் பாஜக அரசு... ஐஐடிகளில் சமஸ்கிருதம் கற்பிக்க உத்தரவாம்... சொல்கிறார் ஸ்மிருதி இரானி
டெல்லி: நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதும் அதை பொருட்படுத்தாமல் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடிகளில் சமஸ்கிருதத்தை கற்பிக்க உத்தரவிட்டுள்ளதாக லோக்சபாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அழிந்துபோன மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம். ஆனால் மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தது முதலே சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிப்பதில் படுதீவிரமாக இருந்து வருகிறது.
நாடு முழுவதும், செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என கேள்வி எழுப்பப்பட்ட போதும் அதைப் பற்றியெல்லாம் பாஜக அரசு கண்டுகொள்வதாக இல்லை. லோக்சபாவில் நேற்று எழுத்துப்பூர்வமாக கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபால்சுவாமி கமிட்டி அளித்த பரிந்துரைகளின் படி ஐஐடிகளில் சமஸ்கிருதம் கற்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
அம்மொழியில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம், நவீன வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்க நெறிகளையும் கற்பிக்கும்படி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஸ்மிருதி இரானி தம்முடைய பதிலில் தெரிவித்திருக்கிறார்.
முந்தைய வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் ஐஐடி உட்பட 40 மத்திய பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருத மொழியை கற்பிக்க வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.