ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றினாலும்... அமலுக்கு வர பல மாதங்களாகும்!
டெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் நாடு முழுமைக்குமான ஒரே சீரான வரி விதிப்பான, சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றி விட்டாலும் கூட அது அமலுக்கு வர பல மாதங்களாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதா, நேற்று ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. அடுத்து இது மீண்டும் லோக்சபாவுக்குப் போகும். இதற்குக் காரணம், கடந்த 2015ம் ஆண்டு மே 6ம் தேதி லோக்சபாவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பல்வேறு கட்சிகளைத் திருப்திப்படுத்துவதற்காக பல மாற்றங்களைக் கண்டுள்ளது. எனவே அந்தத் திருத்தங்களுடன் கூடிய மசோதாவை மீண்டும் லோக்சபாவில் நிறைவேற்ற வேண்டும்.
இது கூட எளிதானதுதான். காரணம், லோக்சபாவில் பாஜகதான் பெரும்பான்மையாக உள்ளது. எளிதில் நிறைவேற்றி விடலாம். ஆனால் அடுத்து ஒரு பெரிய வேலை உள்ளது. அதாவது இந்த வரிச் சீர்திருத்தமானது, மாநிலங்களையும் உள்ளடக்கியது என்பதால் மாநில சட்டசபைகளின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். குறைந்தது 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் கிடைக்க வேண்டும்.
மாநில அரசுகள் இழுத்தடிக்கலாம்
இந்தப் பணி முடிவடைய நிச்சயம் பல மாதங்கள் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அவை திருத்தத்தை வலியுறுத்தி மத்திய அரசை நெருக்கலாம் என்று தெரிகிறது. இதேபோல மேலும் சில மாநிலங்களும் கூட மத்திய அரசுக்கு கிடுக்கிப்பிடி போடலாம். இழுத்தடிக்கலாம்.
13 பாஜக மாநிலங்கள்
இதையெல்லாம் சமாளித்து ஜிஎஸ்டி மசோதா மீண்டு வர பல மாதங்கள் நிச்சயம் ஆகும். தற்போது 29 மாநிலங்களில் 13 மாநிலங்களில் மட்டுமே பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில மசோதாக்கள்
இது மட்டுமல்ல மேலும் சில நடைமுறைகளும் உள்ளன. அதாவது மத்திய ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி என இரு மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்து அவற்றையும் நிறைவேற்ற வேண்டும். அதேபோல மாநில அரசுகளும், தங்களது மாநிலத்துக்கான ஒரு ஜிஎஸ்டி மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல்
இந்த நடைமுறை முடிந்ததும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்ததும், அது சட்டமாகும். அமலுக்கும் வரும்.
ஜிஎஸ்டி கவுன்சில்
மேலும் ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகள், மாநில அரசுகளின் புகார்கள் உள்ளிட்டவற்றைத் தீர்க்க ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட வேண்டும். அதுதொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே இன்னும் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்படாமல் உள்ளது. அதையும் சரி செய்ய வேண்டும்.
ஐடி கட்டமைப்பு
இதை விட முக்கியமாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை சீராக நடைமுறைப்படுத்தி பராமரிக்க தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு ஐந்து ஐடி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில் யாருக்கு டெண்டர் கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை.
இப்படிப் பல வேலைகள் பாக்கி உள்ளதால் இதையெல்லாம் முடித்த பிறகுதான் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையாக அமலுக்கு வரும் என்று தெரிகிறது.