தரம்தாழ்ந்து பேசியது ராகுல்தான்..பாஜக அல்ல: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மோடி பதில்
சத்ராபூர்: பிரதமரின் முடிவு முட்டாள்தனமானது என்று விமர்சித்தது பாரதிய ஜனதா அல்ல.. உங்கள் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்தான் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலையொட்டி சத்ராபூர் என்ற இடத்தில் மோடி பேசியதாவது:
மத்திய பிரதேசத்தில் 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. அவர்கள் ஆட்சி காலத்தில் வளர்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டன? எங்கே அவற்றை காணோம்? அவையெல்லாம் இடிந்து போய்விட்டனவா? நீங்கள் செயய்வே இல்லையே.. ஆனால் பாரதிய ஜனதாவின் ஆட்சிக்காலத்தில் முழுமையாக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தின் மாநில நெடுஞ்சாலைகளுக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாலேயே தெரியும்.. இம்மாநிலத்தை மத்திய அரசு எப்படி சீர்குலைத்திருக்கிறது என்பதை..
இம்மாநில அரசு மேற்கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்.. சோனியாஜி, இளவரசர்ஜி ..உங்களால் அதைப் பற்றி விவாதிக்க முடியுமா? அதுபற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்?
பிரதமர் மன்மோகன்சிங் சொல்கிறார்.. அரசியலின் தரம்தாழ்ந்து போய்விட்டது.. அப்படி தரம் தாழ்ந்து பேசியது உங்கள் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்தானே.. உங்கள் முடிவை அவர் முட்டாள்தனமான முடிவு என்று அல்லவா அவர் விமர்சனம் செய்தார்..
பாரதிய ஜனதாவினர் மத்திய பிரதேச வளத்தை திருடிவிட்டதாக காங்கிரஸ் சொல்கிறது.. ஆம் நாங்கள் திருடிவிட்டோம்தான்.. நாங்கள் திருடியது காங்கிரஸ் கட்சியின் தூக்கத்தை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
புந்தல்கண்ட் பகுதிக்கு ஒதுக்கிய நிதியை மாநில அரசு சிறப்பாக பயன்படுத்தியது என்று பாராட்டியவர் பிரதமர் மன்மோகன்சிங்தானே.. மத்திய பிரதேசத்தில் நீங்கள் வளர்ச்சியை காண்கிறீர்கள்.. இந்தியா முழுவதும் வளர்ச்சியைக் காண பாஜகவுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications