கேரளா ஆளுநர் பதவியில் இருந்து விலக ஷீலா தீட்சித் மறுப்பு!
டெல்லி: மத்திய அரசு கேட்டுக் கொண்ட போதும் கேரளா ஆளுநர் பதவியில் இருந்து விலக முடியாது என்று ஷீலா தீட்சித் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் வேறு ஒரு சிறிய மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசு 7 மாநில ஆளுநர்களை மாற்ற முடிவு செய்துள்ளது. அவர்களுக்குப் பதிலாக முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களை ஆளுநர்களாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
7 மாநில ஆளுநர்கள்
ஆளுநர்களான மேற்குவங்கத்தின் எம்.கே.நாராயணன், கேரளாவின் ஷீலாதீட்சித், ராஜஸ்தானின் மார்க்கரெட் ஆல்வா, குஜராத்தின் கமலா பெனிவால், மகாராஷ்டிராவின் சங்கர நாராயணன், திரிபுராவின் தேவேந்திர கொன்வார், உத்தரப்பிரதேசத்தின் ஜோஷி ஆகியோரை பதவி விலகுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது
அனில் கோஸ்வாமி
மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி இந்த 7 மாநில ஆளுநர்களையும் தொடர்பு கொண்டு ராஜினாமா கடிதங்கள் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
6 பேர் ஏற்பு
மத்திய அரசின் இந்த வேண்டுகோளை 6 மாநில ஆளுநர்கள் ஏற்றுக் கொண்டனர். உத்தரப்பிரதேசத்தின் ஆளுநர் ஜோஷி தமது ராஜினாமாவையும் அனுப்பி வைத்துவிட்டார்.
ஷீலா தீட்சித் மறுப்பு
ஆனால் கேரளாவின் ஆளுநர் ஷீலா தீட்சித் பதவி விலக முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
எழுத்துப்பூர்வமாக தாங்க..
அத்துடன் தாம் பதவி விலக வேண்டியதற்கான காரணத்தை எழுத்துப் பூர்வமாக தாருங்கள் என்று உள்துறை செயலாளரிடம் ஷீலா தீட்சித் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அப்படி மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தால் தமது நீக்கத்தை எதிர்த்து ஷீலா தீட்சித் உச்சநீதிமன்றத்துக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
வேறு மாநிலத்துக்கு..
இதனால் ஷீலா தீட்சித்தின் பிடிவாதம் தொடருமேயானால் அவர் வேறு சிறிய மாநிலத்துக்கு இடம் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
கைது அச்சத்தால் மறுப்பு?
ஷீலா தீட்சித் மீது காமன்வெல்த் ஊழல் வழக்கு, அரசுப் பணத்தை தேர்தலுக்கு வீணாக செலவழித்தது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர் ஆளுநர் பதவியில் இருந்து விலகினால் நிச்சயமாக ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அதனாலேயே ஷீலா தீட்சித் ஆளுநர் பதவியில் இருந்து விலக மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சோனியா ஆளுநர்கள்..
இதனிடையே உரிய தகுதிகளின் அடிப்படையில் மாநில ஆளுநர்களை சோனியா காந்தி நியமிக்கவில்லை; சோனியா காந்தியால் நியமிக்கப்பட்ட காங்கிரஸ் ஆளுநர்கள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சர்ச்சை...
இந்நிலையில் காங்கிரசைச் சேர்ந்த ஆளுநர்கள் அதிரடியாக நீக்கப்படுவது பழி வாங்கும் நடவடிக்கை என சர்ச்சை கிளப்பி விடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பாஜக. தலைவர்கள் மறுத்துள்ளனர்.
நீங்கள் போட்ட பாதை தான்...
மேலும் கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு வந்தபோது, பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் நியமனம் செய்யப்பட்ட விஷ்ணுகாந்த் சாஸ்திரி (உத்தரபிரதேசம்), கைலாசபதி மிஸ்ரா (குஜராத்), பாபு பரமானந்த் (அரியானா), கேதர்நாத் (கோவா) ஆகிய 4 மாநில ஆளுநர்கள் நீக்கப்பட்டனர். அதே நடைமுறைதான் தற்போது பின்பற்றப்படுகிறது என்கிறது பாஜக.