பிரிவினைவாதிகளை அழைத்த பாக். தூதர்.. பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா!
டெல்லி: பாகிஸ்தானுடன் அடுத்த வாரம் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை இந்தியா அதிரடியாக ரத்து செய்து விட்டது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து பாகிஸ்தான் தலையிடுவதை ஏற்கவே முடியாது. இதன் காரணமாகவே பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இரு நாட்டு வெளியுறவுத்துறைச் செயலாளர்களும் ஆகஸ்ட் 25ம் தேதி இஸ்லாமாபாத்தில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். தற்போது அதை இந்தியா ரத்து செய்து விட்டது.
பாக். தூதரால் வந்த வினை
இந்தியாவின் கோபத்திற்கு பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தான் காரணம். இந்தியாவுடனான பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்க அவர் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை டெல்லிக்கு பேச்சுக்கு அழைத்திருந்தார். இது மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பேசிப் புண்ணியம் இல்லை
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறுகையில், இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானுடன் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வெளியுறவுத்துறைச் செயலாளரின் பாகிஸ்தான் விஜயத்திலும் பயன் இருக்காது. எனவே இந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.
போனில் எச்சரித்த சுஜாதா சிங்
முன்னதாக மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சுஜாதா சிங், பாகிஸ்தான் தூதர் பாசித்தை தொலைபேசியில் அழைத்து எச்சரிக்கை விடுத்தார். அப்போது ஒன்று எங்களுடன் பேசுங்கள், இல்லாவிட்டால் பிரிவினைவாதிகளுடன் பேசிக் கொள்ளுங்கள் என்று கடுமையாக கூறினார் சுஜாதா சிங்.
பாசித் அழைத்தது யாரை..
முன்னதாக பாகிஸ்தான் தூதர் பாசித்தை, ஹுரியத் மாநாட்டுத் தலைவர் மீர்வைஸ் உமர் பாருக், சையத் அலி ஷா கிலானி, பிரிவினைவாதத் தலைவர் சபீர் அகமது ஷா ஆகியோரை ஆலோசனைக்கு அழைத்திருந்தார்.