4000 கிமீ தூரம் பாய்ந்து தாக்கும் அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி!
தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய ஏவுகணையான இது, 4000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லக் கூடியதாகும். ஒடிஷா மாநிலம் வீலர் தீவில் இந்த பரிசோதனை இன்று காலை 10.19 மணிக்கு நடந்தது.
இந்த சோதனையில் இன்று இந்திய ராணுவத்தின் திட்டமிடல் படை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த ஆண்டில் நடந்துள்ள 2வது பரிசோதனையாகும் இது. இதற்கு முன்பு கடந்த ஜனவரி 20ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
ஏவுகணையின் முழுமையான செயல்பாடுகள் இன்று பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனையை ராணுவ அதிகாரிகளே இன்று செய்து பார்த்ததுதான் முக்கிய அம்சமாகும். இந்த சோதனை முழுமையாகவும்,திருப்தியாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி ஏவுகணை வரிசையில் இது 4வது தலைமுறை ஏவுகணையாகும். பரீட்சார்த்த அளவில் அனைத்து சோதனைகளையும் இது வெற்றிகரமாக முடித்து விட்டது.
2 நிலைகளைக் கொண்ட அக்னி 4 ஏவுகணையானது, 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டதாகும். இதை மொபைல் லான்ச்சர் மூலமாக ஏவலாம். சாலை மார்க்கமாகவும், ரயிலிலிருந்தும் கூட இதை ஏவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி 2 ஏவுகணையின் மாற்றம் பெற்ற வடிவமே அக்னி 4 ஏவுகணையாகும். இதற்கு முதலில் அக்னி 2 பிரைம் என்றுதான் பெயரிட்டிருந்தனர். இதன் சோதனை 2010ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நடந்தது. அது தோல்வியில் முடிந்தது.
அக்னி 2 பிரைம் ஏவுகணையின் தூரம் 2750 கிலோமீட்டர் ஆகும். அதை மேம்படுத்தி தற்போது 4000 கிலோமீட்டர் தூரமாக மாற்றி டிஆர்டிஓ வெற்றிகரமாக அதைப் பரிசோதித்துள்ளது.