மனித அந்தஸ்து பெற்ற கங்கை, யமுனை நதிகள்
இந்திய நீதிமன்றம் ஒன்று கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு "உயிருள்ள மனிதர்கள்" என்ற அந்தஸ்தை வழங்கியிருக்கிறது.
அதிக அளவில் மாசடைந்துள்ள நதிகளை "பாதுகாத்து மேம்படுத்தும்" நோக்கில், இமயமலை மாநிலமான உத்தராகண்ட் உயர் நீதிமன்றம், புனித நதிகளாக வணங்கப்படும் கங்கை மற்றும் யமுனைக்கு மனிதர்கள் என்ற அந்தஸ்தை வழங்கியிருக்கிறது.
தற்போது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவு மாசடைந்துள்ள நதிகளை மாசுபடுத்துவதில் இருந்து பாதுகாக்க இந்த "சட்டபூர்வ அந்தஸ்து" உதவும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த இரண்டு நதிகளும் புனிதமானவையாக கருதப்படுகின்றன, மேலும் பெரும்பான்மையான இந்துக்களால் பெண் தெய்வமாக வணங்கப்படுகிறது.
நியூசிலாந்தின் வான்கானுய் நதிக்கு சட்டப்பூர்வமாக மனித அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரு வாரத்தில் இந்திய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு நதிகளையும் பற்றிய இந்துக்களின் ஆழமான நம்பிக்கைகளையும் கருத்தில் கொண்டு, அவர்களை நதிகளுடன் கூட்டாக இணைக்க இந்த தீர்ப்பு உதவியாக இருக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
துரிதகதியில் நகரமயமாக்கல் நடைபெறுவது மற்றும் தொழில்மயமாக்கல் உட்பட பல்வேறு காரணங்களால் இந்த இரண்டு நதிகளும் மிக மோசமாக மாசடைந்துள்ளன.
இந்த இரண்டு நதிகளின் பெற்றோராக, உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டு உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், நதிகளின் உரிமைகள் தொடர்பாக அவர்கள் இருவரும் பிரதிநிதித்துவம் செய்வார்கள்.
உத்தராகண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் இந்த சட்டப்பூர்வ அந்தஸ்தால், இரு நதிகளையும் சுத்தப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று சமூக ஆர்வலகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.