'பிரெக்ஸிட்' பாதிப்புகளை இந்தியா சமாளிக்கும்- அருண் ஜேட்லி
டெல்லி: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதால் (பிரெக்ஸிட்) ஏற்படும் குறுகிய கால, நடுத்தர கால பாதிப்புகளை சமாளிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
ஆசிய முதலீட்டு வளர்ச்சி வங்கியின் (ஏஐஐபி) முதல் அமர்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை பெய்ஜிங் சென்றுள்ள அவர் கூறியதாவது:
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதால் சர்வதேச சந்தைகளில் திடீர் மாற்றம் ஏற்படும். இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும்.
இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்தவரை, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்படும் குறுகிய கால, நடுத்தர கால பாதிப்புகளை சமாளிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட நிதிக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தயாராக உள்ளன. இந்தியாவின் பேரியல் பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
The Brexit impact #infographics pic.twitter.com/zKLFT9REdO
— Oneindia Tamil (@thatsTamil) June 25, 2016
இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் குறுகிய கால பாதிப்புகளையும், சந்தைகளில் ஏற்படும் திடீர் மாற்றத்தையும் குறைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.
உலகிலேயே பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. நாடு முழுவதும் தற்போது சாதகமான பருவநிலை நிலவுவதால், இந்தியாவின் வளர்ச்சி மேலும் அதிகரித்து வருகிறது," என்றார் அருண் ஜேட்லி.