யு.எஸ். கோர்ட்டால் குற்றம்சாட்டப்பட்ட ஹைதராபாத் சகோதரர்கள் பற்றி ஐ.பி. விசாரணை
டெல்லி: அல் கொய்தாவுக்கு உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட 2 இந்திய சகோதரர்கள் சொந்த ஊரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனரா என்று உளவுத் துறை விசாரணையை துவங்கியுள்ளது.
ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் சகோதரர்கள் யஹ்யா பாருக் முகமது, இப்ராஹிம் ஜுபைர் முகமது. பாரூக் 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அதன் பிறகு அவர் அமெரிக்காவில் உள்ள லூசியானாவுக்கு சென்றார். அங்கு படித்து அவர் 2002ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்றார்.
2006ம் ஆண்டில் அவர் அமீரகத்திற்கு சென்று அங்கு உள்ள பிரபல நிறுவனத்தில் புராஜக்ட் மேனேஜராக சேர்ந்தார். ஜுபைர் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்தார். அதன் பிறகு அவர் டொலிடோவுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சகோதரர்கள் இமெயில் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இமெயில் மூலம் அல் கொய்தா பற்றி அதிகம் பேசியது எப்.பி.ஐ.யின் கவனத்தை ஈர்த்தது. முதன்முதலாக 2008ம் ஆண்டில் முதன்முதலாக அவர்களின் இமெயிலை எப்.பி.ஐ. கண்காணித்தது.
அதில் இருந்து 4 முதல் 5 ஆண்டுகளாக அவர்களின் இமெயில்கள் கண்காணிக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு வழிகளில் அல் கொய்தா அமைப்பினருக்கு பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அல் கொய்தாவுக்கு உதவியதாக அவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இந்திய உளவுத் துறை விசாரணையை துவங்கியுள்ளது. எப்.பி.ஐ. அதிகாரிகள் எதுவும் கூறாவிட்டாலும் சகோதரர்கள் இந்தியாவில் ஏதாவது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்கு விசாரணை நடத்தப்படுகிறது.