மும்பை தாக்குதல் வழக்கு தாமதம்: பாகிஸ்தானிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியது இந்தியா
டெல்லி: மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவது குறித்த அதிருப்தியை பாகிஸ்தானிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்மார்க்கமாக ஊடுருவி சி.எஸ்.டி. ரயில்நிலையம், தாஜ் ஹோட்டல், நரிமன் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினர். நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள், அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 166 பேர் பலியாகினர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தூக்கிலிடப்பட்ட கசாப்
இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் அஜ்மல் கசாப் என்ற பாகிஸ்தான் தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து புனே சிறையில் கடந்த 2012ம் ஆண்டு அவன் தூக்கிலிடப்பட்டான்.
பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணை
இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் இயங்கிவரும் லஷ்கர்-இ- தொய்பா அமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜாகிர் ரஹ்மான் லக்வி உள்பட 7 பேர் மீது, தாக்குதலுக்கு திட்டமிட்டது, செயல்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
7வது முறையாக விசாரணை ஒத்தி வைப்பு
ஆனால் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. நேற்று தொடங்கவிருந்த விசாரணையானது நீதிபதி விடுப்பில் சென்றதாக கூறி 7-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் விசாரணை தாமதபடுத்தப்படுவதாக இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
பாக். தூதருக்கு சம்மன்
இது தொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து வெளியுறவுத் துறை தனது அதிருப்தியை தெரிவித்தது.
நேரில் எதிர்ப்பு
அதேபோல் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர், அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சக அலுவலகத்துக்கு நேரில் சென்று இந்தியாவின் அதிருப்தியை தெரிவித்தார்.