சார்க் நடவடிக்கைகளில் இந்தியாவின் தலைமைக்கு ஆதரவு: மோடியிடம் மகிந்த ராஜபக்சே
டெல்லி: சார்க் அமைப்புகளின் நடவடிக்கைகளில் இந்தியாவின் தலைமைக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரதமர் மோடியிடம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழாவுக்கு வந்த மகிந்த ராஜபக்சேவுடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது சார்க் நாடுகளின் நன்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக இலங்கை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச பிரச்சனைகளிலும் கூட சார்க் நாடுகளின் நலன் சார்ந்தே முடிவெடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இதை இலங்கை அதிபர் ராஜபக்சே ஏற்றுக் கொண்டதுடன் சார்க் நாடுகளின் நடவடிக்கைகளில் இந்தியாவின் தலைமைதான் சரியாக இருக்கும் என்றும் சார்க் நாடுகளின் எதிர்கால நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட இலங்கை காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.