"சனாதன தர்மமே இந்தியாவின் தேசிய மதம்".. அனைவரும் மதிக்க வேண்டியது கட்டாயம் .. உபி ஆதித்யநாத் பேச்சு
சனாதன தர்மம் குறித்து பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், அதனை இந்தியாவின் தேசிய மதம் என கூறியிருக்கிறார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
ஜெய்ப்பூர்: சனாதன தர்மமே இந்தியாவின் தேசிய மதம் என்றும், இந்தியர்கள் அனைவரும் சனாதன தர்மத்திற்கு கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும் எனவும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளது பெரும் விமர்சனத்திற்கு வித்திட்டுள்ளது.
சனாதன தர்மம் தொடர்பாக பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த காலங்களில் அந்நியர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.
சனாதன தர்மமும் சித்தாந்த போரும்..
இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 'சனாதன தர்மம்' குறித்த பேச்சு அடிக்கடி அடிபட்டு வருகிறது. சனாதன தர்மம் தான் இந்து மதத்தின் அடிப்படை என்றும், அதில் கூறப்பட்டுள்ள விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் வாதமாக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளோ சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்க்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை முன்வைத்து சித்தாந்த ரீதியிலான போரே நடைபெற்று வருகிறது. ஜாதி படிநிலைகளை தூக்கிப்பிடிக்கும், பெண்களை இழிப்படுத்தும் வகையில் இருக்கும் சனாதன தர்மத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
"மிகுந்த வேதனையை தருகிறது"
நிலைமை இவ்வாறு இருக்க, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனாதன தர்மம் குறித்து தற்போது பேசியுள்ளது விமர்சனத்துக்கு வித்திட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பீன்மால் பகுதியில் உள்ள நீல்காந்த் மகாதேவ் கோயிலை புனரமைக்கும் நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் நேற்று கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "இந்தியாவில் பல இடங்களில் இந்து மதத்தின் வழிபாட்டுத் தலங்கள் சேதம் அடைந்த நிலையிலேயே இருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.
"ராமர் கோயில் வழியை பின்பற்றுவோம்"
அந்நியர்களாலும், அராஜக செயல்களாலும் சேதப்படுத்தப்பட்ட நமது மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்பவும், புதுப்பிக்கவும் இதுதான் சரியான தருணம். பிரதமர் நரேந்திர மோடியின் விடா முயற்சியால் 500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி ராமர் கோயில் தற்போது பிரம்மாண்டமாக கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. இதே வழியை பின்பற்றி, நமது மற்ற வழிபாட்டு தலங்கலையும் நாம் புதுப்பிக்க வேண்டும். இதற்காக இந்து மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
"இந்தியாவின் தேசிய மதம்"
இந்தியாவின் தேசிய மதம் என ஒன்று இருக்கிறது என்றால் அது சனாதன தர்மம் மட்டும்தான். மத கோட்பாடுகளை மட்டுமல்லாமல் நமது வாழ்க்கைக்கு தேவையான நெறிகளையும், தத்துவங்களையும் சனாதன தர்மம் நமக்கு கற்பிக்கிறது. எனவே, இந்தியராக இருக்கும் அனைவரும் சனாதன தர்மத்திற்கு கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும்" என யோகி ஆதித்யநாத் பேசினார்.