விரைவில் இந்தியா கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும்.. நிதி ஆயோக் ஷாக்!
இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்று மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வறிகை அதிர்ச்சியளித்துள்ளது.
டெல்லி: இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் என்று மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் மேலும் மோசமாகி வருகிறது. 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் தண்ணீர் தேவை இரண்டு மடங்காகும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார்.
மக்கள் பாதிப்பு
இந்த கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில், தற்போது இந்தியாவில் 60 கோடி இந்தியர்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பஞ்சத்தால் 2 லட்சம் மக்கள் உயிர் இழக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவை அதிகரிப்பு
இந்த தண்ணீர் பஞ்சம் நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. நாட்டின் தண்ணீர் தேவை 2030 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காகும் அந்த ஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் காணாமல் போகும்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "நாட்டின் முக்கிய 20 நகரங்களில் 2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
தண்ணீர் சிக்கனம்
நாட்டு நிலையை கருத்தில் கொண்டு தண்ணீர் சிக்கனம், மழை நீர் சேகரிப்பு விஷயங்களில் மக்கள் ஈடுபட வேண்டும். மரம் நட வேண்டும். அல்லது தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு ஏற்பட்ட கதி நமது ஊர்களுக்கும் ஏற்படும் அவல நிலை ஏற்படலாம்.