ராணுவம் பேசாது "வீரத்தை மட்டும் தான் காட்டும்" - பிரதமர் மோடி புகழாரம்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் கட்டப்பட்ட ராணுவ நினைவிடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவம் பேசாது, வீரத்தை மட்டும் தான் காட்டும் என்று கூறினார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், நாட்டுக்காக போரிட்டு தங்கள் உயிரை நீத்த ராணுவ வீரர்களைக் கெளரவிக்கும் வகையில், போர் வீரர்கள் நினைவிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 12.67 ஏக்கர் பரப்பளவில், ரூ.41 கோடி செலவில் இந்த நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வரலாற்று சிறப்புமிக்க நாளில், நமது துணிச்சல் மிகுந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை ஒரு பெரும் வாய்ப்பாக கருதுகிறேன்.
ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையினர், கடலோர காவல் படையினர் தங்களது உயிரை தியாகம் செய்வதால் தான் நாம் அமைதியாக உறங்குகிறோம். ராணுவம் பேசாது, வீரத்தை மட்டும் தான் காட்டும். அதேபோல் தான் நம்முடைய ராணுவ அமைச்சரும் பேச மாட்டார், அனைத்தையும் செயலில் காட்டுவார்.
ஸ்ரீநகரில் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது ராணுவத்தினர்தான் மீட்பு பணியில் ஈடுபட்டு பெரும்பாலான மக்களை மீட்டனர். அப்பொழுது உதவி செய்யும் போது ஸ்ரீநகர் மக்கள் தானே நம்மீது கல் எறிந்தார்கள் என்று ஒரு போதும் ராணுவத்தினர் நினைக்கவில்லை.அதேபோல் உள்நட்டு போர் சமயத்தில் ஏமனில் சிக்கித்தவித்த இந்தியர்களுடன் சில பாகிஸ்தானியர்களையும் இந்திய ராணுவம் மீட்டது.
மக்களுக்கு உதவ ராணுவம் தயார் நிலையில் உள்ளது. உலகிலேயே இந்திய ராணுவம் மட்டும் தான் மக்களுக்காக பாடுபடுகிறது. ராணுவத்தின் முன் இந்தியர்கள் அனைவரும் சமம். ஐநா அமைதிப்படைக்கு அதிக அளவில் படைபணிகளை வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரர்களின் சீருடை மற்றும் வீரம் குறித்து மட்டுமே நாம் பேசுகிறோம். அவர்கள் மனிதாபிமானத்தின் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இப்படிப்பட்டராணுவத்தினர் பயன் பெறும் வகையில் 'ஒரே பதவி; ஒரே ஒய்வூதியம்' திட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசுதான். ராணுவம், எல்லைப் பாதுகாப்பு படை, கடற்படை போன்ற படைகளின் வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்வதன் காரணமாகத்தான் நம்மால் நிம்மதியாக உறங்க முடிகிறது. இவ்வாறு மோடி பேசினார்.